புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த 2012ம் ஆண்டில், 53 ஆயிரத்து 22-ஆக இருந்த புற்றுநோய் பாதிப்பு, படிப்படியாக அதிகரித்து, 2025ம் ஆண்டில், ஒரு லட்சத்து 97 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என, கணிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் புற்றுநோயியல் துறை செயல்பட்டு வருகிறது.
தடுப்பு மருந்துகள் ஒவ்வொன்றும் லட்சக்கணக்கான ரூபாய் விலை உள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் உயர்ரக மருந்துகளை, மருத்துவமனை நிர்வாகமே கொள்முதல் செய்து தராமல், வெளியில் இருந்து வாங்கி பயன்படுத்த நோயாளிகளுக்கு அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கான விலை உயர்ந்த மருந்தாக கருதப்படும், ‘போர்டெசோமிப்’ என்ற ஊசி மருந்து, கடந்த மூன்று மாதங்களாக இல்லை எனக் கூறி, நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
















