விளாத்திகுளம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 10ஆம் தேதி காணாமல்போன நிலையில், மறுநாள் காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலையுண்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், குற்றவாளியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என பெற்றோர், கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே, மாணவி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான தர்ம முனீஸ்வரன் என்பரை சாயல்குடியில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், 9 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட வந்த பெற்றோர் மாணவியின் உடலை பெற்று கொண்டனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மாணவியின் உடலுக்கு அரசியல் கட்சியினர், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திய நிலையில், மாணவியின் உடல் நேரிடையாக சொந்த ஊரில் உள்ள இடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
















