இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு செய்யவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் தொடங்கியுள்ள ‘பாரத் மின்சார உச்சி மாநாடு 2026’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியை, மத்திய மின்சாரத்துறை செயலர் பங்கஜ் அகர்வால் வாசித்தார். அதில், உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது என்றும், நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க மின்சாரத் துறையை வலுப்படுத்துவது அவசியமானது எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியா பெரும் சாதனை படைத்து வருகிறது எனக்கூறியுள்ள அவர், 2030க்குள் பசுமை மின் உற்பத்தியை 500 ஜிகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே கிரிட்’ என்ற இந்தியாவின் முன் முயற்சிக்கு சர்வதேச ஒத்துழைப்பு தேவை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
















