மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் கிணறுகள் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் குறிவைக்கப்படுவது, எல்பிஜி எரிவாயு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதுடன், பெட்ரோல், டீசல் விநியோகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஜக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரானில் அமைந்துள்ள இரண்டு மிகப்பெரிய எரிவாயு உற்பத்தி வயல்கள் மீதான தாக்குதல், உலக நாடுகளை கவலை கொள்ள செய்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு…
இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையேயான போர், அடுத்தகட்டத்தை எட்டியிருப்பது, உலகின் எரிவாயு மற்றும் எரிசக்தி தேவையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
ஏனென்றால், எண்ணெய் கிணறுகள் மற்றும் எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல், சர்வதேச விநியோக சங்கிலியை நிலைகுலைய செய்துள்ளது.
அதுவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் “ஷா” மற்றும் ஈரானின் “SOUTH PARS” எண்ணெய் வயல்கள் தாக்குதலை சந்தித்திருப்பது, சம்பந்தப்பட்ட நாடுகளை மட்டுமல்ல உலகையே ஆட்டம் காண வைத்துள்ளது.
ஏனென்றால் ஷா மற்றும் SOUTH PARS வயல்கள் மிகக்குறைந்தஅளவில் எரிவாயு உற்பத்தியை செய்துவந்தால் பரவாயில்லை. ஆனால், இந்த இரண்டு வயல்களும் எரிவாயு உற்பத்தியில் கொண்டிருக்கும் இலக்கு மிகப்பெரியதாக இருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் அமைந்துள்ள “ஷா” எரிவாயு வயல், தினசரி 1.28 பில்லியன் கன அடி எரிவாயு உற்பத்தி செய்து வருகிறது. 180 கிலோமீட்டர் தூரம் வரை பரந்து விரிந்து காணப்படும் ஷா எரிவாயு வயல், ஐக்கிய அரபு அமீரகத்தின் 20 சதவீத தேவையை பூர்த்தி செய்வதாக திகழ்கிறது. அதுமட்டுமல்ல, உரங்களின் முக்கிய மூலப்பொருளான, கந்தக உற்பத்தியில் உலகின் 5 சதவீத தேவையை “ஷா” நிறைவேற்றுகிறது.
மறுபுறம் ஈரானின் 70 முதல் 80 சதவீத எரிவாயு உற்பத்தியை பூர்த்தி செய்யும் உலகின் நம்பர் ஒன் எரிவாயு வயலாக SOUTH PARS திகழ்கிறது. அதுமட்டுமல்ல, ஆயிரத்து 800 ட்ரில்லியன் கன அடி எரிவாயுவை தேக்கி வைக்கும் அளவுக்கு, மிகப்பெரிய RESERVIOR-ஐ “SOUTH PARS” கொண்டிருக்கிறது. ஈரானுக்கான மின்சார உற்பத்தி பெரும்பாலும், இதனை மட்டுமே சார்ந்திருக்கிறது
SOUTH PARS வயலால் ஈரான் மட்டும் லாபம் பார்க்கவில்லை. கத்தாரும் பெருமளவில் பயனடைந்திருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கத்தாரை முன்னணி எல்பிஜி ஏற்றுமதியாளராக மாற்றியதே இந்த எரிவாயு வயல் தான்.
இப்படியான முக்கியத்துவம் பெற்றுள்ள “ஷா” மற்றும் “SOUTH PARS” எரிவாயு வயல்கள் தொடர்ச்சியாக இது போன்ற தாக்குதலை எதிர்கொண்டால், அதனை மறுசீரமைப்பதே கடினம் என கூறப்படுகிறது.
உதாரணமாக, கடந்த 2003-ம் ஆண்டு ஈராக் போருக்கு பிறகு, தாக்குதலுக்குள்ளான எண்ணெய் வயல்களை சரிசெய்வதற்கே இரண்டாண்டுகள் பிடித்ததாக தெரிகிறது.
ஏற்கனவே ரஷ்யா உடனான போரால் உக்ரைனில் உள்ள கட்டமைப்புகள் உருக்குலைந்திருக்கும் நிலையில், வளைகுடா நாடுகளிலும் இதே போன்ற நிலை தொடர்ந்தால் உலகப் பொருளாதாரம் படுபாதாளத்தில் விழும்.
வளைகுடா நாடுகளில் வெறும் பொருளாதார இழப்போடு நின்று விடாது. அரசியல் மாற்றம் , சமூக மாற்றம் என அனைத்திற்கும் வாய்ப்பு ஏற்படும். பட்ஜெட் ஒதுக்கீடு அடிவாங்கும்… மக்களுக்கான நலத்திட்டங்கள் முடங்கி போகும்… விலைவாசி தாறுமாறாக உயரும்… வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடும்…
உலக நாடுகள் உடனான உறவு முறிந்து , நட்பு நாடுகள் எல்லாம் எதிரி நாடுகளாக மாறும் சூழல் கூட உருவாகும்..
மறுபுறம் சர்வதேச அளவில் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வதால், இறக்குமதியை நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகள் சிரமத்திற்கு ஆளாகும். இதுமட்டுமல்ல, வல்லரசு நாடான அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றம் கூட ஏற்படலாம்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் மட்டுமே, உலகப் பொருளாதாரம் தப்பிக்கும் என்பதே சர்வதேச நாடுகளின் ஒருமித்த குரலாக இருக்கிறது.
















