ஈரானின் மினாப் பகுதியில் 165 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டதில் AIயின் செயல்பாடு பெரும் விவாதத்தை துாண்டியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய ஈரான் போர் 20 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடந்து வருகிறது. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனி உட்பட பல முக்கிய இராணுவத் தலைவர்கள் முதல் நாளிலேயே கொல்லப்பட்டனர். அமெரிக்காவும் இஸ்ரேலும் தலைநகர் தெஹ்ரான் உட்பட ஈரானின் பல இடங்களில் ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்த தாக்குதலின்போது, தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள ஷஜாரே தய்யேபே பெண்கள் தொடக்கப் பள்ளியில் ஏவுகணைகள் தாக்கின. இந்த கொடூரத் தாக்குதலில் ஏழு முதல் 12 வயதுக்குட்பட்ட 165-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
இது ஈரான் போரில் நடந்த மிக மோசமான மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல் என்று சர்வதேச அளவில் கடும் கண்டங்கள் எழுந்தன.
165 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்க இராணுவமே காரணம் என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்த அதிபர் ட்ரம்ப், பொதுமக்களைக் குறிவைக்கும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை என்று கூறியிருந்தார். மேலும், தங்கள் ஆயுதங்களைக் கையாள தெரியாத ஈரான் இராணுவமே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்களின் ஆய்வுகள் அனைத்தும் பள்ளி மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவையே சுட்டிக் காட்டுகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் போர்த்துறையின் AI தொழில்நுட்பமே காரணமாக இருக்கலாம் என்று கூறப் படுகிறது.
முன்னதாக 2024-ல், சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஆந்த்ரோபிக் நிறுவனம், போர் திட்டமிடலை விரைவுபடுத்துவதற்காக, தனது AI மாடலை அமெரிக்கப் போர் துறை மற்றும் பிற தேசியப் பாதுகாப்பு முகமைகளில் பயன்படுத்துவதற்காக உருவாக்கியது.
உளவுப் பகுப்பாய்வை வியத்தகு முறையில் மேம்படுத்தவும், அதிகாரிகளின் முடிவெடுக்கும் செயல்முறைகளுக்கு உதவவும் பென்டகனுடன் இணைந்து (Palantir) பாலன்டிர் என்ற போர்-தொழில்நுட்ப நிறுவனம் ஒரு Claude மென்பொருளை உருவாக்கியது.
முழுமையான தன்னாட்சி ஆயுதங்கள் அமெரிக்கக் குடிமக்களைக் கண்காணிப்பதற்காகத் தனது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அனுமதிக்க மறுத்ததால் ஆந்த்ரோபிக் நிறுவனத்தை தீவிர இடதுசாரி செயற்கை நுண்ணறிவு நிறுவனம் என்று முத்திரை குத்திய அதிபர் ட்ரம்ப், அந்நிறுவனத்தின் அனைத்து தொழில்நுட்ப கருவிகளையும் அரசின் அனைத்து துறைகளிலும் பயன்படுத்த தடை விதித்தார். அதற்கு பதிலாக Open AI நிறுவனத்துடன் அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்தது.
அதற்குள் ஈரான் போர் தொடங்கியது. 24 மணி நேரத்தில் ஈரானில் 1,000 இலக்குகளைத் தாக்க அமெரிக்கா AI யைப் பயன்படுத்தியது.
ஒரு இலக்கைக் கண்டறிவது முதல், ஒப்புதல் பெற்று தாக்குதல் நடத்துவது வரை ஆந்த்ரோபிக்கின் Claude மென்பொருளையே அமெரிக்க இராணுவம் பயன்படுத்தியது.
ஈரான் மீதான முதல் தாக்குதல்களுக்கு முன்னதாக, கிளாட் மென்பொருளால் இயக்கப்படும் மேவன் ஸ்மார்ட் சிஸ்டமே அமெரிக்க ராணுவத்திற்காக, ஈரானின் “நூற்றுக்கணக்கான” சாத்தியமான இலக்குகளின் பட்டியலைத் தயாரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்படியே அமெரிக்க இராணுவம் அமெரிக்கா மீது தாக்குதலைகளை நடத்தி வருகிறது.
தாக்குதலுக்கு உள்ளான பள்ளியின் இருப்பிடம் 2013ம் ஆண்டில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படைத் தளத்தின் ஒரு பகுதியாக இருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. ஆனால் 2016ம் ஆண்டு அதே கட்டிடத்தில் IRGC தளம் தனியாக பிரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மாற்றத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாத AI-யின் சிறு பிழை விலைமதிப்பில்லா பள்ளி மாணவிகளின் உயிரைப் பறித்துள்ளது.
அமெரிக்க இராணுவம் மற்றும் அமெரிக்க உளவுத்துறை , செயற்கைக்கோள் காட்சிகள் முதல் எளிய இணையத் தேடல்கள் வரை மில்லியன் கணக்கான தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்திருந்தாலே பள்ளியின் இருப்பிடத்தை உடனடியாக கண்டறிந்திருக்க முடியும்.
போர்க்களத்தில் AI-யின் பங்கு மிகவும் புதுமையானது என்றாலும், ஆபத்தானதும் கூட என்பதும் இப்போது தெரியவந்துள்ளது.
குண்டு வீசும் முடிவை, ‘சிந்தனை வேகத்தை’ விட மிக வேகமாக எடுத்துள்ள AI-யின் செயல்பாடுகளை முழுமையாக நம்ப முடியாது என்பதை ஈரான் பள்ளி மாணவிகளின் மரணம் காட்டுகிறது.
















