சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
வழக்கில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்கள், குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பு வழங்கினார்.
அப்போது, உயிரிழந்த தந்தை ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு போடப்பட்டது விசாரணையில் தெரியவந்ததாக நீதிபதி கூறினார்.
இருவரையும் கைகளை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு தாக்கியது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
நாம் அடித்து பழகுவதற்கு அப்பா, மகன் கிடைத்துள்ளனர், அவர்களை அடித்து பயிற்சி எடுப்போம் என போலீசார் பேசியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.
இரவு முழுவதும் 10 நிமிட இடைவெளி விட்டு இருவரையும் தாக்கியுள்ளதாக கூறிய நீதிபதி,
இருவரின் மரணங்கள் கொலை தான் என்பதை நீதிமன்றம் உறுதி செய்வதாக தீர்ப்பளித்தார்.
மேலும் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
















