கோவை பட்டீஸ்வரர் கோயிலில் வெள்ளோட்டம் நடத்தப்பட்ட போதிலும் தேரோட்டத்திற்கு அனுமதிக்காததால் பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் பங்குனி தேர்த்திருவிழாவை முன்னிட்டு வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. இருப்பினும், தேரோட்டம் நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த சிவ பக்தர்கள் ஏற்கனவே வெள்ளோட்டம் நடத்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் சரிவர உள்ளதாக உறுதி செய்த பின்னரும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர்.
அதற்கு, பாதுகாப்பு, கூட்ட நெரிசல் மற்றும் சட்டம்-ஒழுங்கு காரணங்களை முன்வைத்து தேரோட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.
















