பழைய புடவைகளை மறுசுழற்சி செய்து, சுமார் 22,000-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை உருவாக்கிய 15 வயது சிறுமி மான்யா ஹர்ஷா சாதனை படைத்து வருகிறார்.
பெங்களூருவைச் சேர்ந்த மான்யாவின் இந்த முயற்சிக்கு அடித்தளமிட்டவர் அவரது பாட்டி. வீட்டில் துணிப்பைகளைத் தைத்துப் பழகிய பாட்டியின் மறைவுக்குப் பிறகு, அந்தத் துயரத்தை ஒரு ஆக்கப்பூர்வமான செயலாக மாற்ற மான்யா முடிவெடுத்தார்.
அதன் விளைவாகத் ‘Grandma’s Green Weaves’ என்ற அமைப்பு உருவானது.
பள்ளி செல்லும் சிறுமி என்பதால் மான்யாவின் ஆர்வத்தை ஆரம்பத்தில் பலரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், எதற்கும் தளராத மான்யா, “விழிப்புணர்வு என்பது ஒரு நாளில் வராது, அதற்குப் பொறுமை அவசியம்” என்ற கொள்கையோடு தொடர்ந்து செயல்பட்டார்.
தனிநபராகத் தொடங்கிய இந்த முயற்சி, இன்று ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.
வீட்டில் பயன்படுத்தாத பழைய புடவைகளை Grandma’s Green Weaves’ என்ற அமைப்பிடம் அப்பகுதி மக்கள் வழங்குகின்றனர்.
இந்த அமைப்பின் மூலம் உள்ளூர் தையல் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் பைகள் மண்ணில் சேருவதும் தடுக்கப்பட்டுள்ளது.
சிறிய மாற்றங்களே பெரிய புரட்சிக்கு வித்திடும்” என்பதற்கு மான்யா ஹர்ஷா ஒரு சிறந்த உதாரணம்.
















