53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில் ஆய்வு செய்வதற்காக ஆர்டெமிஸ்-2 என்ற விண்கலத்தை நாசா வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து 32 அடுக்கு உயரமுள்ள ராக்கெட் சீறிப்பாய்ந்தது.
இந்த விண்வெளிப் பயணத்தில் நாசா விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் கனடா விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பவும், செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பவும், நாசா மேற்கொண்டு வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது.
இவர்கள் நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்குத் திரும்பும் வகையில், 10 நாட்களுக்கு பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
விண்வெளி வீரர்கள் முதல் இரண்டு நாட்களை புவியின் உயர் வட்டப்பாதையில் கழிப்பார்கள் என்றும் அங்கு ஓரியன் விண்கலத்தின் உயிர் காக்கும் வசதிகள், உந்துவிசை, வழிகாட்டுதல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை முழுமையாகச் சோதிப்பார்கள் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இந்தச் சோதனைகளுக்குப் பிறகு, ‘டிரான்ஸ்லூனார் இன்ஜெக்ஷன்’ எனும் முக்கிய இன்ஜின் மூலம் விண்கலம் நிலவை நோக்கிய பாதையில் செலுத்தப்படும் என்றும் ஓரியன் விண்கலம் நிலவின் பின்புறம் சென்று, நிலவு மற்றும் பூமியின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி மீண்டும் பூமியை நோக்கித் திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்கலம் மணிக்கு சுமார் 40 ஆயிரத்து 233 கி.மீ வேகத்தில் வளிமண்டலத்திற்குள் நுழைந்து, பசிபிக் பெருங்கடலில் வந்து இறங்கும் என நாசா தெரிவித்துள்ளது.
















