தி.மு.க. யாத்திரை நடத்தினால் “என் மகன் என் பேரன்” என்று பெயர் சூட்டி இருப்பார்கள் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார் .
மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனையை மக்களுக்கு விளக்கிக் கூறும் வகையிலும், தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் வகையிலும், தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்கிற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டிருக்கிறார்.
கடந்த 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த பாத யாத்திரை, 5-வது நாளான இன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்றது. மானாமதுரையிலும் அண்ணாமலைக்குப் பூரண கும்பம் மரியாதையுடன் பொதுமக்கள் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், மக்களிடையே பேசிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மத்தியில் பிரதமர் மோடி 3-வது முறையாக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. அதற்காகத்தான் இந்த “என் மண் என் மக்கள்” பாத யாத்திரை. தமிழகம் முழுவதும் வந்து மக்களைச் சந்திக்க இருக்கிறேன்.
அரசியல் நிகழ்ச்சிகளில் தற்போது உதயநிதியின் மகன் இன்பநிதியும் பங்கேற்கத் தொடங்கி இருக்கிறார். ஆகவே, இதேபோல ஒரு யாத்திரையை தி.மு.க.வினர் நடத்தினால், “என் மகன் என் பேரன்” என்று பெயர் வைத்திருப்பார்கள். இதை நாம் கடந்த 27 மாதங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். டாஸ்மாக் வருமானத்தை இன்னும் அதிகமாக்க வேண்டும் என்று தி.மு.க. அரசு நினைக்கிறது” என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.
டாஸ்மாக்கால் வருமானம் பெறுவது யார்? எல்லோரும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்தான். ஆகவே, டாஸ்மாக் வருமானத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, கள்ளுக்கடைகளை திறக்கலாம். இதன் மூலம் ஏழை பனைத் தொழிலாளர்களுக்கு வருமானம் கிடைக்கும். அவர்களது வாழ்க்கைத் தரமும் உயரும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.