இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்கு, ஐ.நா. நிரந்தர தூதுக்குழுவும், ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளரும் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள்.
நிலவின் வட துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் விண்கலத்தை அனுப்பின. ஆகவே, நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியது. கடந்த மாதம் 14-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விணைவெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோவால் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், திட்டமிட்டபடி கடந்த 23-ம் தேதி மாலை சரியாக 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.
இந்த வெற்றியை இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளும் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழுவும் இந்த வெற்றியை கொண்டியது. இது தொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசிரா காம்போஜ், தனது எக்ஸ் பக்கத்தில், “சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியை, நியூயார்க்கில் உள்ள நிரந்தரத் தூதரங்களில் உள்ள எங்கள் சகாக்களுடன் ஒன்றுகூடி நாங்கள் கொண்டாடினோம். இந்த சந்தர்ப்பத்தில் உங்களின் வருகைக்கும் அசைக்க முடியாத ஆதரவுக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.
பின்னர், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தூதரகத்தில் செந்தியாளர்களைச் சந்தித்த ருசிரா காம்போஜ், “சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது மனிதகுலத்திற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். நாங்கள் நிலவின் தென்துருவத்தில் பெயரிடப்படாத பகுதிக்குள் நுழைகிறோம். இதில், குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், உலகில் எந்த நாடும் இன்றுவரை எட்டமுடியாத நிலவின் தென்துருவத்தை இந்தியா அடைந்திருப்பதுதான். இது இந்திய விஞ்ஞானிகள் அசாத்திய திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் இந்தியாவின் இருப்பைக் குறிப்பது மட்டுமல்லாமல், 140 கோடி இந்தியர்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்றி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுப்படி, இந்தப் பணியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமானதல்ல. நம் அனைவருக்கும் சொந்தமானது. மேலும், ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் எதிர்கால அறிவியல் சாதனைகளுக்கான வாக்குறுதியைக் கொண்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.
அதேபோல, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த வெற்றி உற்சாகம் அளிக்கிறது. இதுவரை யாரும் தரையிறங்காத நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த இந்தியாவுக்கு வாழ்த்துகள். இது ஒரு மிகப்பெரிய சாதனை. இதை உலகமே உற்று நோக்குகிறது” என்று கூறியிருக்கிறார்.