சென்னை கடற்கரை முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை 7 மாதங்களுக்கு பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகச் சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரை முதல் எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பாதையில் விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகளுக்காக, சென்னை கடற்கரை முதல் சிந்தாதிரிப்பேட்டை இடையே வரும் 27-ந் தேதி முதல் பறக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா, சென்னை கடற்கரை முதல் எழும்பூர் இடையே சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலான நான்காவதுப் பாதைக்கான பணிகள் வரும் 27-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம் 279 கோடி செலவில், 7 மாதத்தில் பணிகள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நான்காவது பாதை அமைப்பதன் மூலம் தென்பகுதிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். கடற்கரை முதல் வேளச்சேரி இடையே 122 ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. வரும் 27-ந் தேதி முதல் 80 மின்சார ரயில் சேவை மட்டுமே இயக்கப்படும்.
இதேபோல, திருவள்ளூர் முதல் வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி முதல் வேளச்சேரி ரயில்கள் சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும். வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு முதல் ரயில் காலை 5 மணிக்கும் கடைசி ரயில் இரவு 10.15 மணிக்கும் இயக்கப்படும். சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு முதல் ரயில் காலை 5.40 மணிக்கும் கடைசி ரயில் இரவு 11.05 மணிக்கும் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.