“ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்திருப்பதற்கு 4 மாநில முதல்வர்கள் வரவேற்புத் தெரிவித்திருக்கிறார்கள்.
பண விரயத்தையும், நேர விரயத்தையும், ஊழியர்களின் பணிச் சுமையையும் குறைக்கும் வகையில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்கிற பிரசாரத்தை மத்தியில் ஆளும் பா.ஜ.க. முன்னெடுத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமா என்பது குறித்து ஆராய, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருக்கிறது.
இக்குழு அமைத்திருப்பதற்கு அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களின் முதல்வர்கள் வரவேற்புத் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் தேவை. இது பாராட்டத்தக்க நடவடிக்கை. தேர்தல்களை பிரித்து நடத்துவதால், தேர்தல் காலங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதிலும், புதிய கொள்கைகளை முன்னெடுப்பதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே, நாடாளுமன்றத் தேர்தலையும், சட்டமன்றங்களின் தேர்தலையும் இணைத்து நடத்த வேண்டியது மிகவும் அவசியம். இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு உ.பி. மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் ஷர்மா கூறுகையில், “ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய குழு அமைத்திருப்பது பிரதமர் மோடியின் மிக முக்கிய முடிவு. பல்வேறு தேர்தல்களை நடத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் காலமாகவே இருக்கிறது. இதன் காரணமாக வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படுகிறது.பிரதமர் மோடி இதை சரியாக உணர்ந்து சரியான முடிவை எடுத்திருக்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலை வரும்போது இந்தியாவின் வளர்ச்சி வேறு வடிவத்தில் இருக்கும். செலவும் குறையும். அமிர்த காலத்தில் நாட்டுக்கு பிரதமர் மோடியால் கொடுக்கப்பட்ட ஒரு சிறந்த பரிசு இது. இந்த துணிச்சலான முடிவை எடுத்ததற்காக அஸ்ஸாம் மக்கள் சார்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
அதேபோல, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேர்தல்களுக்கான செலவை இது பெருமளவில் மிச்சப்படுத்தும். அவ்வாறு சேமிக்கப்படும் பணத்தை வளர்ச்சிப் பணிகளுக்காக செலவிட முடியும். பிரதமர் மோடியின் இந்த முடிவால், அவர் மீதான மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அவரை மீண்டும் பிரதராக்க வேண்டும் என்ற முடிவை மக்கள் எடுத்துவிட்டார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் முடிவை வரவேற்றுள்ள உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “நாட்டின் வளர்ச்சி பற்றியே பிரதமர் மோடி எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் நாடு முன்னேறும். இதை உத்தரகண்ட் வரவேற்கிறது” என்று கூறியிருக்கிறார்.