சென்னை மெட்ரோ இரயிலுக்கு நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை கூடி வருகிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் என்பது, மத்திய அரசு மற்றம் தமிழ்நாடு அரசின் கூட்டு முயற்சியாகும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வசிக்கும் பொதுமக்களுக்குச் விரைவானப் போக்குவரத்துச் சேவை வழங்கும் வகையில் மெட்ரோ இரயில் சேவை மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
சென்னையில், கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான புள்ளி விவரங்களை மெட்ரோ இரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில், நடப்பு ஆண்டு, அதாவது 2023-ம் ஆண்டில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஜூலை மாதம் பயணம் செய்த பயணிகளை விட, 3 லட்சத்து 36 ஆயிரத்து 215 பயணிகள் அதிகம். இதுவரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து, இதுவரை ஒரு மாத எண்ணிக்கையில் இதுவே அதிகம் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டை பொறுத்தவரை, ஜனவரியில், 66,07, 458 பயணிகளும், பிப்ரவரியில், 63,69,282 பயணிகளும், மார்ச்சில் 69,99,341 பயணிகளும், ஏப்ரலில் 66, 85, 432 பயணிகளும், மே மாதத்தில் 72,68, 007 பயணிகளும், ஜூனில் 74,06, 876 பயணிகளும், ஜூலையில் 82,53,692 பயணிகளும், ஆகஸ்ட் மாதம் 85,89, 977 பயணிகள் பயணித்துள்ளனர். இதில், அதிகபட்சமாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.
ஒரு நாளில் அதிகபட்சமாகக் கடந்த மாதம் 11 -ம் தேதி 3,29, 920 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
க்யூ ஆர் குறியீடு மூலம் 31, 05, 583 பயணிகளும், UPI பணபரிவர்த்தனை மூலம் 1,59,737 பயணிகளும், வாட்ஸ்அப் மூலம் 1,70,225 பயணிகளும், பயண அட்டைகளைப் பயன்படுத்தி 47,56,951 பயணிகளும், டோக்கன்களைப் பயன்படுத்தி 3,26,491 பயணிகளும், குழு பயணச்சீட்டு மூலம் 5,685 பயணிகளும், சிங்கார சென்னை என்ற தேசிய பொது இயக்க அட்டையைப் பயன்படுத்தி 3, 95,267 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
நடப்பாண்டில் இதுவரை 5 கோடியே 81 லட்சத்து 80 ஆயிரத்து 65 பேர் மெட்ரோ இரயிலில் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொது மக்களுக்கு நம்பகமாகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் போக்குவரத்துச் சேவையை அளிக்க வேண்டும் என உயர்ந்த நோக்கில், பாரதப் பிரதமர் மோடி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மெட்ரோ சேவையை அர்ப்பணித்துள்ளார். இதன் காரணமாகவே, பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.