நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைப் போல இதயத்தில் தேசபக்தி நிறைந்த ஒருவரால் மட்டுமே, “சங்கல்ப் சே சித்தி” என்ற பயணத்தை தொடங்குவதைக் கற்பனையாவது செய்ய முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
டெல்லியில் “என் மண் எனது தேசம்” இயக்கத்தின் கீழ் அமிர்தக் கலச யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய சட்டம் மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “சுதந்திரத்திற்கான நீண்ட போராட்டம் 1857 முதல் 1947 வரை 90 ஆண்டுகள் நடைபெற்றது. இந்த நோக்கத்திற்காக எண்ணற்ற அறியப்பட்ட மற்றும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்திருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டத்துக்காக தியாகம் செய்தவர்களுக்குக் கையில் மண்ணுடன் உறுதிமொழி எடுத்து அஞ்சலி செலுத்துவதன் மூலம், ஒவ்வொரு தனிநபரும், குடும்பமும், குடிமகனும், குழந்தையும் சிறந்த இந்தியாவை உருவாக்கும் எண்ணத்துடன் உணர்வுப்பூர்வமாக இணைய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
நமது பிரதமர் நரேந்திர மோடி போன்று இதயத்தில் தேசபக்தி நிறைந்த ஒருவர் மட்டுமே இந்த “சங்கல்ப் சே சித்தி” (தீர்மானத்தை நிறைவேற்றுதல்) என்ற பயணத்தைத் தொடங்குவதை கற்பனை செய்ய முடியும்.
இந்த அமிர்தக் கலச யாத்திரையின் மூலம், செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை, ஒவ்வொரு வீடு, பகுதி மற்றும் கிராமங்களில் இருந்தும், அக்டோபர் 1 முதல் 13-ம் தேதி வரை வட்டாரப் பகுதிகளில் இருந்தும், அக்டோபர் 22 முதல் 27-ம் தேதி வரை மாநில அளவிலும் மண் சேகரிக்கப்படும். நிறைவாக, இந்த 7,500 அமிர்த கலச பானைகள் அக்டோபர் 28 முதல் 30-ம் தேதி வரை நாட்டின் தலைநகர் டெல்லியை வந்தடையும்.
இந்த அமிர்தக் கலசத்தில் இருக்கும் மண்ணைக் கொண்டு நமது மாவீரர்களின் நினைவாக டெல்லியில் பூங்கா உருவாக்கப்படும். இது அமிர்தக் காலத்தில் இந்தியாவை சிறந்ததாக மாற்ற வேண்டும் என்பதை ஒவ்வொரு குடிமகனுக்கும் நினைவூட்டும். இந்த முன்முயற்சியில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்துள்ளார். பிரதமர் மோடி தலைமையின் கீழ், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது முழு நாட்டிலும் தேசபக்தி உணர்வை எழுப்பியுள்ளது.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட, 5 உறுதி மொழிகளை ஏற்று செயல்படுமாறு பிரதமர் மோடி அனைத்து நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த உறுதிமொழிகள் சிறந்த இந்தியாவை உருவாக்குவதற்கான வழி. 2047-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு துறையிலும் இந்தியாவை முன்னணியில் வைத்திருக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம். நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவு கண்ட இந்தியா, அடுத்த 25 ஆண்டுகளில் உருவாக்கப்படும்” என்று கூறினார்.