நிலவின் தென் துருவத்துக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் “லூனா-25” விண்கலம் விழுந்து நொறுங்கியதில், நிலவின் மேற்பரப்பில் 10 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதை நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பி இருக்கிறது.
நிலவின் வட துருவத்தை ஆராய அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் விண்கலத்தை அனுப்பின. ஆனால், இதற்கு நேர்மாறாக தென் துருவத்தை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியது. கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அனுப்பப்பட்ட இந்த விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.
அதேசமயம், இந்தியாவுக்கு முன்னதாகவே தென் துருவத்தை அடைய வேண்டும் என்பதற்காக, கடந்த மாதம் 10-ம் தேதி “லூனா-25” என்கிற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியது. இந்த விண்கலத்தை கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி தரையிறக்க ரஷ்யா முடிவு செய்திருந்தது. ஆனால், நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாகவே, கடந்த 19-ம் தேதி கட்டுப்பாட்டை இழந்த “லூனா-25” நிலவில் விழுந்து நொறுங்கியது.
இந்த நிலையில்தான், நிலவை கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆர்பிட்டர், ரஷ்யாவின் “லூனா-25” விண்கலம் விழுந்த இடத்தை படம் பிடித்து அனுப்பி இருக்கிறது. இப்புகைப்படங்களை நாசா தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. அப்பதிவில், “லூனா-25” விண்கலம் தரையிறங்க வேண்டிய இடத்திற்கு அருகே நிலவில் புதிய பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, இது “லூனா-25” விழுந்தஇடமாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. இந்த புதிய பள்ளம் 10 மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கிறது.