பரமக்குடி ஒன்றிய பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் தற்கொலைக்கு காரணமான காவல் ஆய்வாளரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டி, 200 -க்கும் மேற்பட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றிய பாஜக இளைஞரணி துணைத் தலைவராக இருப்பவர் தமிழ்ச்செல்வன். திமுகவினர் தூண்டுதலின் காரணமாக, பரமக்குடி ஒன்றிய இளைஞரணி துணை தலைவர் தமிழ்ச்செல்வன் மீது திமுகவின் காவல் துறையினர் காட்டுமிராண்டித்தனமாக அடக்கு முறையை அவிழ்த்துவிட்டனர். இதில், தமிழ்ச்செல்வன் சொல்லமுடியாத அளவுக்குப் பாதிக்கப்பட்டார்.
இதனால், மனம் வெறுத்துப்போன பரமக்குடி ஒன்றிய பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தமிழ்ச் செல்வன் பார்த்திபனூர் காவல் நிலையத்திலே தீயிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இந்த தகவல், அக்கம் பக்கம் பகுதிகளுக்கு வேகமாகப் பரவியது. இதைக்கேட்டு, பரமக்குடி ஒன்றிய பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தமிழ்செல்வன் உறவினர்கள் கொதித்துப் போனார்கள்.
இதனையடுத்து, களத்தில் இறங்கிய பாஜகவினர், பரமக்குடி ஒன்றிய பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தமிழ்செல்வனை தற்கொலைக்கு தூண்டிய, பார்த்திபனூர் காவல் ஆய்வாளரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும் என போராட்டத்தில் குதித்தனர்.
பாஜக மாநில இளைஞரணி தலைவர் சிவா தலைமையில் 200 -க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் வாகன போக்குவரத்து தடைபட்டது.
இந்த தகவல் அறிந்து அந்த பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என பாஜகவினர் அறிவித்துள்ளனர்.