ஜி20-ல் உலகளாவிய தெற்கின் குரல் என்கிற நிலைப்பாட்டை இந்தியாவின் பொறுப்பாக பார்க்கிறேன் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பின்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஜெய்சங்கர் பதிலளித்தார். அப்போது, ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின் பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் கலந்துகொள்ளாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், “ஜி20 உச்சி மாநாடு எத்தனையோ முறை நடந்திருக்கிறது. அப்போதெல்லாம், பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களில் சில நாட்டின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள். எனினும், அந்த நாடுகளின் பிரதிநிதிகள் மூலம் மேற்கண்ட நாட்டின் நிலைப்பாடு மாநாட்டில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் மற்ற நாடுகளின் தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கலந்து பேசி இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணிகளில் உள்ளனர். ஒவ்வொருவரும் முக்கியப் பிரச்சினைகளுடன் வருவார்கள்.குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளாகவோ அல்லது அதற்கு கொஞ்சம் முன்னதாகவோ இருந்த, உலக நாடுகளுக்கு இடையேயான ஒப்பீட்டுப் பொருளாதார முக்கியத்துவம் மாறி இருக்கிறது. நாடுகளுக்கு இடையேயான அரசியல் நம்பிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக, பெரிய அதிகாரமுடைய நாடுகள் மற்றும் குறைவான அதிகாரமுடைய நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வேறுபாட்டை முன்பு பார்த்தால், அவை ஒரு நெருக்கமான குழுக்களாக இருந்தன. மேற்கத்திய உலகில் அவை வலுவான கூட்டணி அமைப்பைக் கொண்டிருந்தன. ஆனால், தற்போது உலகம் மாறிவிட்டது. அதற்கான சிறந்த உதாரணமாக ஜி20 உச்சி மாநாடு இருக்கும்.
கடந்த காலங்களில் நாம் அனைத்தையும் ஜி7 அமைப்பிடம் விட்டுவிட்டோம். ஆனால், இன்று ஜி20 அமைப்பு உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தததாகப் பார்க்கப்படுகிறது. கடந்தாண்டை எடுத்துக் கொண்டால், ஜி20 கூட்டத்துடன் ஒப்பிடும்போது, நேட்டோ கூட்டம், பிரிக்ஸ் கூட்டம், குவாட் கூட்டம், ஐ.நா. கூட்டம் உட்பட எந்தக் கூட்டமும் இந்த அவளவுக்கு கவனத்தை ஈர்க்கவில்லை. ஏனென்றால், இக்கூட்டம் என்பது விதிவிலக்கான முக்கியத்துவம் வாய்ந்தது என்று இன்று உலகம் அங்கீகரிக்கிறது” என்றார்.
தொடர்ந்து, ஜி20-ல் உலகளாவிய தெற்கின் குரல் என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுத்துகொள்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், “உலகின் வேறு எந்த நாட்டின் தலைவரும், கூட்டத்தில் இல்லாத வளரும் நாடுகளை ஒன்றிணைக்க முயற்சிக்கவில்லை. ஆகவே, தெற்கின் குரல் என்பது தனித்துவமானது. இது இந்தியாவுக்கான பொறுப்பாக நான் பார்க்கிறேன். நீங்கள் எப்படி மக்களை ஒன்றிணைப்பீர்கள்? நம் அனைவருக்கும் பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை எப்படி அனைவரையும் உணர வைப்பீர்கள்? அதற்காக இந்த உலகத்துக்கு சரியானதைச் செய்ய இங்கே நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.