சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை உறக்க நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது. இதை இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தை செப்டம்பர் 6-ம் தேதி தரையிறக்க முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்தது. எனினும், சந்திரயான்-2-ன் ஆர்பிட்டர் கடந்த 4 ஆண்டுகளாக நிலவை சுற்றி வந்துகொண்டுதான் இருக்கிறது. இது அவ்வப்போது புகைப்படங்களையும் எடுத்து அனுப்பி வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் ஆய்வு மேற்கொண்டு வந்தன. இந்த சூழலில், தற்போது நிலவில் சூரியன் மறைந்து இருள்சூழத் தொடங்கி இருக்கிறது. எனவே, லேண்டரும், ரோவரும் உறக்க நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை மீண்டும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், சந்திரயான்-2 ஆர்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான்-3 விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறது. அதில், கடந்த 6-ம் தேதி சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் (DFSAR) கருவி, சந்திரயான்-3 லேண்டரை புகைப்படம் எடுத்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Chandrayaan-3 Mission:
Here is an image of the Chandrayaan-3 Lander taken by the Dual-frequency Synthetic Aperture Radar (DFSAR) instrument onboard the Chandrayaan-2 Orbiter on September 6, 2023.More about the instrument: https://t.co/TrQU5V6NOq pic.twitter.com/ofMjCYQeso
— ISRO (@isro) September 9, 2023