இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இலங்கையில் உள்ள கொழும்பில் அமைந்துள்ள பிரம்மதேச மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார்கள். கில் பவர்ப்ளே முடியும்வரை நிதான ஆட்டத்தை கடைபிடிக்க, ரோகித் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிக்கொண்டு இருந்தார். இதனால் இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்களைக் கடந்து வழுவான நிலையில் இருந்தது.
அதன் பின்னர் அதிரடியாக ஆட நினைத்த கில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கில் தனது விக்கெட்டை இழந்தபோது இந்திய அணி 11.1 ஓவரில் 80 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் வந்த விராட் கோலி தனது விக்கெட்டை 2 ரன்களில் இழக்க இவருக்கு அடுத்து ரோகித் சர்மாவும் 53 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் கைகோர்த்த இஷான் கிஷன் மற்றும் கே.எல் ராகுல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி 49.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக துனித் 5 விக்கெட்டுகளையும், அசலங்கா 4 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை அணி. இலங்கை அணி தொடக்கம் முதல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக 25 ரன்கள் எட்டியபோது 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன் பின்னரும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, இலங்கை அண் ஒரு கட்டத்தில் 25.1 ஓவரில் 99 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதன் மூலம் இந்திய அணியின் வெற்றி எளிதாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கை அணியின் தனஞ்செயா மற்றும் துனித் கூட்டணி இந்திய அணிக்கு சவால் அளிக்கும் ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.
இவர்களின் ஆட்டம் ஒரு கட்டத்தில் இலங்கைக்கு வெற்றியை உறுதி செய்துவிடும் என்பது போல் இருந்தது. ஆனால் இவர்களின் கூட்டணியை ஒரு கட்டத்தில் ஜடேஜா முறியடித்தார். அதன் பின்னர் இலங்கை அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியில் இலங்கை அணி 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.