தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து விஷயங்களிலும் தோற்றிருக்கிறார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
”என் மண் மக்கள்” பயணம், பெரும் ஆர்ப்பரிப்புடன் மக்கள் வெள்ளம் சூழ, எழிலும் பொழிலும் மிகுந்த பொள்ளாச்சியில் இனிதே நடந்தது. பயணத்தை நடந்து தொடர முடியாத அளவுக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மீது பேரன்பு கொண்ட சகோதர சகோதரிகள் சூழ்ந்து, தமிழக அரசியல் வரலாற்றில் புதியதோர் செய்தியைப் பறைசாற்றியிருக்கிறார்கள்.
தமிழக அரசியலின் போக்கைக் கண்டு விரக்தியடைந்து, மாற்றம் வேண்டும் என்று வீதிக்கு வந்திருக்கிறார்கள். மக்கள் எழுச்சி, பாரதிய ஜனதா கட்சி, சரியான பாதையில் செல்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. மக்கள் குரலை மட்டும் கேட்டால் போதும் என்று பொள்ளாச்சி மக்கள், தமிழக பாஜகவுடன் துணை நிற்கிறார்கள்.
தமிழகத்தில் புதிய அரசியலைக் கொண்டு வர வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வரும் பாராளுமன்றத் தேர்தல் திமுகவை அப்புறப்படுத்த வேண்டிய தேர்தல். 2024 இல் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்பது உறுதி. அதற்குத் தமிழகமும் துணை…
— K.Annamalai (@annamalai_k) September 24, 2023
தமிழக அரசியல் மாற்றத்தில் தங்கள் பங்கும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்கள் நமது பயணத்தில் வந்திருக்கிறார்கள். புதியதோர் அரசியலை, உண்மையான நேர்மையான அரசியலை ஆதரிக்க மக்கள் விரும்புகிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது.
மோடியின் முகவரி : பொள்ளாச்சி
சாலையோர சிறு வியாபாரிகளுக்கான திட்டத்தின் மூலம் பயன்பெற்ற வேலுமணி, அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டத்தில் பயன்பெற்ற செல்வி நித்யா, பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்யும் சுதாகர், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் மூலம் பலனடைந்த சக்திவேல், முத்ரா கடனுதவி மூலம் பலனடைந்த வெங்கட்ராமன், மக்கள் மருந்தகம் நடத்தும் சுந்தரம், கயிறு வாரியத்தின் மூலம் பலனடைந்த திரு. விஜயகுமார். இவர்கள்தான் பாரதப் பிரதமர் மோடியின் முகவரி.
தமிழின் பெருமையை நமது பிரதமர் மோடி, வாரணாசி பாரதியின் பெயரில் இருக்கை, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் செங்கோல், திருக்குறள் உலக மொழிகளில் மொழி பெயர்த்தது என உலகம் எங்கும் கொண்டு செல்கிறார்.
2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொள்ளாச்சி நகருக்கு நமது மத்திய அரசு “Town of Export Excellence” என்ற அங்கீகாரத்தை வழங்கி கௌரவித்தது. இந்தப் பகுதியில் தயாராகும் நெகமம் காட்டன் புடவைகளுக்கு, இந்த ஆண்டு மார்ச் 31 அன்று புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி திண்டுக்கல் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கு 3649 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடக்கின்றன. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பணிகள் நிறைவடையும். பொள்ளாச்சி ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறவிருக்கின்றன.
பொள்ளாச்சி, தென்னை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகளவில் உள்ளன. கோவை பகுதியில் 88,467 ஹெக்டர் நிலத்தில் தேங்காய் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.
தமிழகத்தில் 11 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வரும் விவசாயிகளை ஆதரிக்க, தேங்காய், கொப்பரைத் தேங்காய் முதலானவற்றை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை, விற்பனை செய்யவேண்டும் என்றும், சத்துணவில் தேங்காய் பால் போன்றவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழக பாரதிய ஜனதா கட்சி இந்த ஆண்டு ஜனவரி போராட்டம் நடத்தியது. இன்று வரை இதை முழுமையாக நிறைவேற்றாமல் இந்த பகுதி மக்களை வஞ்சித்து வருகிறது திமுக.
2013-14ஆம் ஆண்டு, ஒரு கிலோ கொப்பரை தேங்காய்க்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை 52.50 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது ஒரு கிலோ கொப்பரை தேங்காய்க்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை 108.6 ரூபாயாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தென்னை விவசாயத்தில் முன்னோடியான கொங்கு பகுதியின் விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெற, மட்டை உரிக்கப்பட்ட தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலை கடந்த 9 ஆண்டுகளில் 106 சதவீதம் உயர்ந்து தற்போது ஒரு கிலோவுக்கு ரூபாய் 29.30 ஆக உயர்ந்துள்ளது.
பாரதப் பிரதமர் ஆட்சியில், நமது நாடு, ஒன்பது ஆண்டுகளில் பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில், மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். 2047 ஆம் ஆண்டுக்குள், முதலிடத்தைப் பிடிக்க நமது பிரதமர் சபதம் ஏற்றிருக்கிறார்.
நேர்மை, துணிவு, தன்னம்பிக்கை, தைரியம் நிறைந்த நமது பிரதமர் மோடிக்கு, மூன்றாவது முறையாக வாய்ப்பு கொடுக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகளின் தலைவர்கள் உணர்ந்துள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத தன்னம்பிக்கை மக்களுக்கு உருவாகியிருக்கிறது. மேட் இன் இந்தியா வார்த்தைக்கு மரியாதை கிடைத்திருக்கிறது. ஒன்பதாண்டு காலம் ஊழல் இல்லாத ஆட்சிக்கான நல்ல விளைவுகள் தெரிகின்றன.
குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு பிரதமர் மோடி நேர்மை மீது பொறாமை. ராகுல் காந்தியை முப்பது ஆண்டுகளாக 17 முறை முன்னிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவரால் சாமானிய மக்களை ஈர்க்க முடியவில்லை.
மோடி சாமானிய மக்களைப் பிரதிபலிக்கிறார். கொண்டாடப்பட வேண்டியவர் மோடி அவர்கள். குடும்ப அரசியல் ஜனநாயகத்தின் சாபம். அதனால் தான் மோடி அதை நீக்க விரும்புகிறார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அத்தனை விஷயங்களிலும் தோற்றிருக்கிறார். திமுக எல்லா விஷயங்களிலும் தோற்றிருக்கிறது. திமுகவுக்குத் தெரிந்தது ஜாதி அரசியல், பண அரசியல் மட்டும்தான். திமுக ஆட்சி திருட்டு ஆட்சி.
இருட்டு ஆட்சி திமுகவின் திருட்டுத்தனம் யாருக்கும் வராது. பிரச்சினை உருவாக்குவதும் அதைத் தீர்ப்போம் என்று மக்களை ஏமாற்றுவதும் திமுகவுக்கு கைவந்த கலை. கச்சத்தீவை தாரை வார்த்து விட்டு, இன்று கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று போலி போராட்டம் நடத்துவது, காவிரி நீர் உரிமையை விட்டுக் கொடுத்து, அதனை பூதாகாரமான பிரச்சினை ஆக்கக் காரணமாக இருந்து, பின்னர் காவிரி பிரச்சினைக்குப் போராடுவது போல் வேஷமிட்டது, நீட் தேர்வு மசோதாவைக் கொண்டு வந்து விட்டு, இப்போது அதற்கு எதிராகப் போராடுவது, ஆளுங்கட்சியாக இருக்கும்போது டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு விட்டு, பின்னர் எதிர்க்கட்சியாக இருக்கும்போது அதற்கு எதிராகப் போராடியது என ஒவ்வொன்றையும் தாரை வார்த்துவிட்டு, பின்னர் அதற்காகப் போராடுவது போல் கபட நாடகம் ஆடி, மத்திய அரசைக் குற்றம் சொல்லும் திமுக.
தற்போது தென்னை நார் தொழிலை ஆரஞ்சு வகை பிரிவில் மாற்ற அரசு உத்தரவு பிறப்பித்து விட்டு, அதனை மறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது போல் நடித்திருக்கிறது.
தமிழகத்தில் சுமார் 8000 க்கும் மேற்பட்ட தென்னைநார் தொழிற்சாலைகள் உள்ளன.
பொள்ளாச்சியில் மட்டும் தென்னை நார் பொருள்கள் மூலம் சுமார் 2000 கோடிக்கு வருவாய் கிடைக்கிறது. 2016 ஆம் ஆண்டு, தென்னை நார் சார்ந்த தொழிலானது “வெள்ளை” பிரிவில் (White Category) மத்திய அரசின் சுற்றுச் சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சான்று அளிக்கப்பட்டு இயங்கி வந்தது.
திமுக ஆட்சிக்கு வந்த பின், 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தென்னை நார் சம்மந்தப்பட்ட தொழிலை ஆரஞ்சு வகை பிரிவுக்கு மாற்றினார்கள். இவர்கள் மாற்றிவிட்டு இப்போது மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.
திமுகவினர் கமிஷன் வாங்க மக்கள் விவசாயிகளை வஞ்சிக்கிறார்கள். தமிழகத்திலேயே அதிக சொத்துவரி, பொள்ளாச்சி நகராட்சியில்தான் விதிக்கப்படுகிறது. மற்ற நகராட்சி மாநகராட்சிகளை விட இரண்டு மடங்கு அதிகமாக சொத்து வரி விதிக்கப்படுகிறது.
அரசியல் தூய்மைக்கு பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது பாஜகவின் நம்பிக்கை. அதனால்தான் 33% இட ஒதுக்கீடு கொண்டு வந்திருக்கிறார்கள். திமுகவில் குடும்ப கோட்டாவில் மட்டும்தான் இட ஒதுக்கீடு. திமுக அமைச்சர்களில் 34 பேரில் 2 பெண் அமைச்சர்கள்.
தமிழகத்தில் புதிய அரசியலைக் கொண்டு வர வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வரும் பாராளுமன்றத் தேர்தல் திமுகவை அப்புறப்படுத்த வேண்டிய தேர்தல். 2024 இல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்பது உறுதி. அதற்குத் தமிழகமும் துணை நிற்கும் என்பது பொள்ளாச்சி மக்கள் இன்று விடுத்திருக்கும் செய்தி. பாஜக தமிழர்களின் கட்சி.
விவசாயிகளை முன்னிறுத்தும் கட்சி. தமிழர் நலனுக்காகப் பாடுபடும் கட்சி என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். மக்களின் எண்ணம், நம்பிக்கை, உணர்வு. மக்களுடன் பாஜக இருக்கும். பாஜக வெளியூர் கட்சி என்று இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் போலி பிம்பமும் வரும் பாராளுமன்ற தேர்தலில் உடையும் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.