திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கோவைக்கு பிரச்சினை வரும், என்றும் 1996 திமுக ஆட்சியில் தீவிரவாதத் தாக்குதலால், கோவையின் வளர்ச்சி 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
”என் மண் என் மக்கள்” பயணம், கோவையில், கோவை வடக்கு மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிகளில் மக்கள் ஆரவாரத்துடன் சிறப்புடன் நடந்தேறியது.
தமிழகத்தின் பிற பகுதிகளில் வேர்வையைக் கொடுத்து கட்சியை வளர்த்திருக்கிறார்கள் என்றால், கோவையில், ரத்தத்தைக் கொடுத்து கட்சியை வளர்த்திருக்கிறார்கள்.
பாரதப் பிரதமர் நரேந்திர ஆட்சியில்தான், ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு வேலை செய்கிறது. வீடு இல்லாதவர்களுக்கு, கழிப்பறை வசதி இல்லாதவர்களுக்கு, வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு என அனைத்து எளிய மக்களின் தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன., மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியம், எந்த இடைத்தரகர் கமிஷனும் இல்லாமல், நேரடியாக மக்களுக்குக் கிடைக்கிறது. சுத்தமான, ஊழலற்ற அரசியல் நடக்கிறது.
கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர். கவுண்டன்பாளையம் நமது சிலிக்கான் சிட்டி. மூன்று தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் உள்ளன. இந்தியாவின் முக்கியத் தொகுதிகளில் ஒன்று. கோவையின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி ஆகும். இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான தொகுதிகளில் ஒன்று. 60000 பேருக்கு… pic.twitter.com/nquGD5vlJO
— K.Annamalai (@annamalai_k) September 26, 2023
நாட்டின் வளர்ச்சியில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் வேலை செய்கிறோம். தமிழகத்தில், தமிழக அரசு மற்றும், அதிகாரிகள் செய்யவேண்டிய வேலையை பாஜக செய்கிறது. ஏழை எளிய மக்களிடம், மத்திய அரசின் நலத்திட்டங்களைக் கொண்டு சென்று, அவர்களைப் பயன்பெறச் செய்கிறது.
குடும்ப அரசியலுக்கு எதிராக யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார் நமது பிரதமர் மோடி. வளர்ச்சியின் பாதையில் நாடு செல்கிறது. 2014 ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் 11 ஆவது இடம் இருந்த நமது நாடு, தற்போது 5 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
பாரதப் பிரதமர் மோடியின் நல்லாட்சியில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 ஆவது இடத்தைப் பிடிக்கும். 2047 ஆம் ஆண்டு, உலகின் முதல் இடத்தில் பாரதம் இருக்க வேண்டும் என்பது நமது பிரதமரின் கனவு. அதனை நோக்கி உழைத்துக் கொண்டிருக்கிறார்.
நமது வாழ்நாளில், பாரதம், பொருளாதாரத்தில் உலகின் முதல் நாடு என்ற நிலையை அடைவதைப் பார்க்க முடியும். நாடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால், நேர்மையான ஊழல் இல்லாத அரசால்தான் முடியும். நேர்மையான அரசியல் நடத்த முடியும் என்பதை நமது பிரதமர் நிரூபித்திருக்கிறார்.
பூட்டிய வீட்டில் இருந்து திருடன், திருடன் என்று கத்திக் கொண்டு ஓடுவது போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துகிறார். தமிழகத்தில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்.
அமைச்சரவையில் உள்ள 11 அமைச்சர்கள் மீது ஊழல் விசாரணை உள்ளது. மூன்று அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை சமீபத்தில் உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க ஆரம்பித்துள்ளது. மொத்தம் தமிழக 34 அமைச்சர்களில் 21 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டோ விசாரணையோ நடைபெற்று வருகிறது.
முதலமைச்சரின் மகனும் மருமகனும் ஒரு ஆண்டில் 30000 கோடி சொத்து சேர்த்துள்ளனர் என்று அமைச்சர் பிடிஆர் கூறியதை இதுவரை அவர் மறுக்கவில்லை. சாராய அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கோவைக்கு வந்ததும் கோவை மக்களுக்குப் பழக்கமில்லாத வாக்குக்குப் பணம் கொடுக்கும் முறையை கொண்டு வந்தார்.
தொழிலதிபர்களை மிரட்டினார். இன்று சிறையில் இருக்கிறார். நமது பாரதப் பிரதமரின் ஆட்சியையும் திமுக ஆட்சியையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்தால், திமுக ஆட்சியின் அவலங்கள் வெளிப்படையாகத் தெரியும்.
பாரதப் பிரதமர் மோடி, தமிழ் மொழியின் பெருமையை உலகமெங்கும் செல்லுகின்ற இடம் எல்லாம் மகிழ்ச்சியுடன் சொல்லுகிறார். உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி பேசப்படும் இந்தியாவில் இருந்து வருகிறேன் என்று தமிழைப் பெருமைப்படுத்துகிறார்.
நமது பிரதமர் மோடி தமிழ் கற்றுக் கொண்டு பேசினால், தமிழகத்தில் உடனடியாக அரசியல் மாற்றம் வந்துவிடும். தமிழ் கலாச்சாரத்துக்கு மரியாதையையும் இதுவரை யாரும் வழங்காத பெருமையையும் கொடுத்திருக்கிறார்.
பாராளுமன்றத்தில் தமிழர்களின் பாரம்பரியமான செங்கோல் அலங்கரிக்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில், தமிழகமும் மோடி பக்கம் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கோவைக்கு பிரச்சினை வரும். 1996 திமுக ஆட்சியில் தீவிரவாதத் தாக்குதலால், கோவையின் வளர்ச்சி 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது.
2006 – 2011 திமுக ஆட்சியில் மின்வெட்டு காரணமாக, சிறுகுறு தொழிற்சாலைகள் அனைத்தும் நலிவடைந்துவிட்டன. 2021 திமுக ஆட்சிக்கு வந்ததும், நடந்த தற்கொலைப் படை தாக்குதல் இறைவன் அருளால் முறியடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் 23 பேர் கைது செய்யப்பட்டும், 42 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சிலிண்டர் வெடிப்பாகத்தான் தெரிகிறது. இந்தச் சம்பவத்தை பாஜக கையில் எடுக்கவில்லை என்றால், இறந்த தீவிரவாதிக்கு 10 லட்சம் பணம் கொடுத்து மாலை போட்டு மரியாதை செய்திருப்பார் ஸ்டாலின்.
கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர். கவுண்டன்பாளையம் நமது சிலிக்கான் சிட்டி. மூன்று தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் உள்ளன. இந்தியாவின் முக்கியத் தொகுதிகளில் ஒன்று.
கோவையின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி ஆகும். இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான தொகுதிகளில் ஒன்று. 60000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பகுதி. ஆனால், திமுக, வளர்ச்சிக்கு எதிரான கட்சி.
வரலாறு காணாத 15% முதல் 50% வரை மின்கட்டண உயர்வால், கோவையின் சிறுகுறு தொழிற்சாலைகளை நலிவடையைச் செய்த திமுகவை எதிர்த்து, தமிழகமெங்கும் சிறுகுறு நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்திருக்கின்றன. சுயதொழில் செய்யும் மக்கள் வாழ்வாதாரத்தையே சிதைத்திருக்கிறது திமுக.
கொங்கு கலாச்சாரத்தின் ஆணிவேர் கூட்டுக் குடும்பம். மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்படுத்தியிருக்கிறார் முதலமைச்சர். இரண்டு கோடியே 27 லட்சம் குடும்பத் தலைவிகள் இருக்கும் தமிழகத்தில், மகளிர் உரிமைத் தொகை 60% சகோதரிகளுக்குக் கிடைக்கவில்லை.
அது மட்டுமல்லாது, 50% சொத்துவரி உயர்வு, 50% மின்கட்டண உயர்வு, 30% குடி நீர் வரி உயர்வு, லஞ்சம் 40% வசூல் என ஒத்தையாகக் கொடுத்துவிட்டு, மக்களிடம் கத்தையாக வசூல் செய்கிறது திமுக அரசு.
கடன்கார, குடிகார மாநிலமாக தமிழகத்தை மாற்றி வைத்திருக்கிறார்கள். 7 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள். நம் ஒவ்வொருவரின் மீதும் 3.5 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது.
தாயைப் பழிப்பதும், இந்து தர்மத்தைப் பழிப்பதும், நமது பிரதமர் மோடியைப் பழிப்பதும் ஒன்றுதான். மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியடைந்தது.
சனாதன தர்மம், இந்து தர்மம், கலாச்சாரம், தாய்மார்களைப் பழிப்பது என்று தொடர் இந்து விரோதப் போக்கை மேற்கொள்ளும் திமுகவையும், தாய்மார்கள் அத்தகைய தோல்வி அடையச் செய்வார்கள்.
சனாதன தர்மத்தைப் பழித்துப் பேசிய உதயநிதிக்கு, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மக்களும் நிச்சயமாக வரும் பாராளுமன்றத் தேர்தலில் தண்டனை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் 400 எம்பிக்களுடன் நமது பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவது உறுதி. அடுத்த ஐந்து ஆண்டு காலம், நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கான ஆட்சி.
நமது குழந்தைகள் நலனுக்காக, தமிழகத்தில் பாஜக சார்பில் 39 எம்பிக்கள் அனுப்ப வேண்டியது நமது கடமை என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.