கடந்த மூன்று நாட்களில், சென்னையிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, தைவான் நிறுவனமான பெகாட்ரான், ஜப்பானிய நிறுவனமான யாசாகி நிறுவனங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெகாட்ரான் மற்றும் யாசாகி ஆகிய நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த இரு நிறுவனங்களிலும், இருவேறு சந்தர்ப்பங்களில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
யாசாகி தொழிற்சாலையில் புதன்கிழமை இரவு 8:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தின் போது, தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அவர்கள் சரியான நேரத்தில் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர்.
இதேபோல், பெகாட்ரான் நிறுவனத்தின் ஐபோன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீவிபத்தின் போது தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில், பெகாட்ரான் நிறுவனம் வெள்ளிக்கிழமை முதல் iPhone 14Plus மாடல்களின் உற்பத்தியை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தீ விபத்தால், உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், சில உயர் தொழில் நுட்ப உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுபோன்ற விபத்துகள் அடுத்தடுத்து நிகழ்வதால், பல கேள்விகளை எழுகின்றன. இதுபோன்ற விபத்துகளைச் சமாளிக்க, அத்தகைய தொழிற்சாலைகள் போதுமான வசதியுடன் உள்ளனவா, இந்த தொழிற்சாலைகளில் பாதுகாப்பு தரங்களைச் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்களா போன்ற பல்வேறு கேள்விகள் எழுகிறது.