அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக, நகரத்தின் பல்வேறு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை வெள்ளிக்கிழமை காலை மூன்று மணிநேரத்தில் கொட்டித் தீர்த்ததால், நகர் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
நியூயார்க் நகரில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகரில் ஏற்பட்டிருக்கும் வெள்ள அச்சுறுத்தல், வடகிழக்கு பகுதி முழுவதும் சுமார் 25 மில்லியன் மக்களைப் பாதிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் கடுமையான வெள்ளப்பெருக்கு நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூயார்க் நகரில் மோசமான வானிலை நிலவி வருகிறது. எனவே, மக்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், நகரின் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சுரங்க நடைபாதைகளில் வெள்ளநீர் புகுந்திருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.