பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்றனர்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் 1-ம் தேதி மாபெரும் தூய்மை இயக்கம் நடைபெறுகிறது. ஸ்வச் பாரத் என்பது தனிப்பட்ட பொறுப்பு அல்ல, அனைவரும் இணைந்து செயல்படுத்துவதாகும். தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க நீங்களும் இந்த முயற்சியில் சேருங்கள். நீங்கள் வசிக்கும் தெரு, சுற்றுப்புறம் அல்லது உங்கள் பகுதியிலுள்ள பூங்கா, ஏரி அல்லது பொது இடங்களை தூய்மைப்படுத்துங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த அழைப்பை ஏற்று நாடு முழுவதும் இன்று தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், தேசியத் தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி உள்ளிட்ட பலரும் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். அதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தெருக்களை சுத்தம் செய்தனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சீதாபூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பீகார் மாநிலம் பாட்னாவிலுள்ள காளிகட்டில் அம்மாநில பா.ஜ.க. தலைவரும், அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் டெல்லி ஐ.டி.ஓ. சத்காட்டிலும், உ.பி.யில் பா.ஜ.க. தலைவர் பூபேந்திர சிங் சௌத்ரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் நாடு முழுவதும் நடந்த தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்றனர்.
தூய்மைப் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு நாடு முழுவதும் உள்ள மக்களை அறிவுறுத்திய பிரதமர் மோடி, இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வது மகாத்மா காந்தியின் தூய்மையான இந்தியா என்ற கனவை நிறைவேற்றுவதற்கான மாபெரும் நடவடிக்கையாக இருக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.