தென்காசியைச் சேர்ந்த 59 பேர் தனியார் பேருந்து மூலம் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சுற்றுலா சென்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேபி, கலா, முருகேசன், கௌசல்யா உள்ளிட்ட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து, குன்னூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து 9 பேரின் உடல்களும் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம், அவர்களின் சொந்த ஊரான கடையத்திற்குக் கொண்டு வரப்பட்டன. உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்டு அவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர்.
தொடர்ந்து இறுதிச் சடங்குகள் நடைபெற்ற பிறகு, கடையம், ஆழ்வார்குறிச்சி, அகஸ்தியர் புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மயானங்களில் இறந்தவர்களின் உடல்கள், அவர்களின் முறைப்படி அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டன.