டெல்லி மதுக்கொள்கை ஊழல் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளர் தினேஷ் அரோரா மற்றும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகுண்டா ரெட்டியின் மகன் ராகவ் மங்குடா ஆகியோர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
தேசியத் தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதற்காக, 749 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமம் வழங்கப்பட்டது. இதன்படி, மதுக்கடை உரிமையாளர்களே விலையை நிர்ணயம் செய்து கொள்ளவும், வாடிக்கையாளர்களுக்கு இலவசத்தை வழங்கவும், அதிகாலை 3 மணி வரை கடைகளைத் திறந்து வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த புதிய மதுபானக் கொள்கையில் பல்வேறு விவகாரங்களில் ஊழல், முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, இது தொடர்பாக டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமார், அம்மாநில துணை நிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனாவிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து, மதுபானக்கொள்கை ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ம் தேதி பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதோடு, விசாரணையும் மேற்கொண்டது. பின்னர், இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா உட்பட 36 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. மேலும், புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக மணீஷ் சிசோடியாவிடம் பலமுறை விசாரணையும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக, ஒய்.எஸ்.ஆர்.சி.பி. காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மகுண்டா சீனிவாசலு ரெட்டியின் மகன் ராகவ் மகுண்டா, மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளரும், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபருமான தினேஷ் அரோரா ஆகியோர் நேற்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதைத் தொடர்ந்து, மகுந்தா மற்றும் அரோரா இருவரையும் சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் மன்னித்து, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும், வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் சி.பி.ஐ.யிடம் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். எனினும், இச்சோதனை குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் மறுத்து விட்டன.