காஷ்மீர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தை சர்ச்சைக்குரிய பகுதிகள் என்று வரைபடங்களில் காட்டி பிரசாரம் செய்தது, இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை குறைத்து மதிப்பிட்டுக் காட்டியது, கொரோனா காலத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை கேவலமாக விமர்சித்தது உட்பட நியூஸ் கிளிக் செய்த இழிவான சதிச் செயல்களை நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை புட்டுப்புட்டு வைத்திருக்கிறது.
இந்தியாவில் டெல்லியைத் தலைமை இடமாகக் கொண்டு நியூஸ் கிளிக் என்கிற இணையதள செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை ஆசிரியராக இருப்பவர் பிரபீர் புர்காயஸ்தா. இவர், மத்திய அரசைப் பற்றியும், இந்தியாவைப் பற்றியும் அவதூறாக செய்தி வெளியிடுவதற்காக சீன ஆதரவாளர்கள் மற்றும் சீன ஆதரவு நிறுவனங்களிடம் இருந்து முறைகேடாக நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் அடிப்படையில், கடந்த 2021-ம் ஆண்டு நியூஸ் கிளிக் அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள சீன ஆதரவு நிறுவனங்களிடம் இருந்து முறைகேடாக நிதி பெற்றதைக் கண்டறிந்தது. மேலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார பீரங்கியாகக் கருதப்படும் நெவில் ராய் சிங்கம் என்பவரின் மூலம் இப்பணத்தை பெற்றது தெரியவந்தது.
இவ்வாறு முறைகேடாகப் பெறப்பட்ட பணம், இந்தியாவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும், சீனாவுக்கு ஆதரவாகவும் செய்தி வெளியிடுவதற்காக இடதுசாரி சிந்தனை கொண்ட பத்திரிகையாளர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், தன் மீதும், தனது நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் பிரபீர் உத்தரவு பெற்றிருந்ததால் அமலாக்கத்துறையால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
இந்த நிலையில், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, நேற்று முன்தினம் நியூஸ் கிளிக் நிறுவனம் மற்றும் தொடர்புடைய பத்திரிகையாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தியது. சோதனை முடிவில் நியூஸ் கிளிக் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதோடு, அதன் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா, முக்கியப் பங்குதாரர் அமித் சக்கரவர்த்தி ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில்தான், நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் சதியை டெல்லி காவல்துறை அம்பலப்படுத்தி இருக்கிறது. அதாவது, ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களை இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டாமல், சர்ச்சைக்குரிய பகுதிகளாக சித்தரித்து வரைபடம் வெளியிட்டதாக டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவரம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார பீரங்கியான நெவில் ராய் சிங்கம் என்பவருக்குச் சொந்தமான ஷாங்காய் நிறுவனத்தைச் சேர்ந்த சீன ஊழியர்கள் சிலரின் ரகசிய உள்ளீடுகள் மூலம் தெரியவந்ததாகவும், இது தொடர்பாக ஸ்டார்ஸ்ட்ரீம் என்ற பெயரில் உள்ள நிறுவனம் மின்னஞ்சல்களை பரிமாறிக் கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறது. இதற்காக சீன ஆதரவு நிறுவனங்களிடம் இருந்து 115 கோடி ரூபாய் பெற்றதாகவும் கூறியிருக்கிறது.
மேலும், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறைத்து மதிப்பிட்டுக் காட்டியதாகவும், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் இதுபோன்ற சட்டவிரோத வெளிநாட்டு நிதி மூலம் டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டங்களை நீட்டித்து, அத்தியாவசிப் பொருட்கள் கிடைக்க விடாமல் சீர்குலைத்ததாகவும், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்து, அழிவுகளை ஏற்படுத்தத் தூண்டி சதி செய்ததாகவும் தெரிவித்திருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, கொரோனா பேரிடர் காலத்தில் தொற்றுநோயை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் பிரச்சாரம் செய்ததாகவும், அதேபோல, 2019 பொதுத் தேர்தலின்போது ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான மக்கள் கூட்டணி என்கிற குழுவுடன் சேர்ந்து, தேர்தல் செயல்முறையை நாசப்படுத்த பிரபீர் புர்காயஸ்தா சதி செய்தார் என்றும் கூறியிருக்கிறது. இதன் மூலம் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் சதி அம்பலமாகி இருக்கிறது.