“நலம், நலமறிய ஆவல்” இதை எங்கோக் கேட்டதும் போல் இருக்கின்றதா ? வேறு எங்கேயும் இல்லை நாம் பல காலமாக அஞ்சல் மூலம் பயன் படுத்தி வந்த சொற்றொடர் தான். இன்று ஏன் நாம் அதைப் பற்றி பேச வேண்டும் என்று எண்ணுகிறீர்களா ? ஆம் இன்று உலக அஞ்சல் தினம்.
தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்த காலத்தில் 10000 கிமி தொலைவில் இருப்பவரை கூட ஒரு வினாடியில் அழைத்துப் பேசவோ இல்லை பார்க்கவோ முடிகிறது. ஆனால் தொழிநுட்பம் குறைந்தேக் காணப்பட்ட அந்த காலத்தில் தகவல் பரிமாரியாக இருந்தது அஞ்சல் மட்டுமே.
1874ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டில் பேர்ன் மாநகரில் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட நாளை நினைவுகூரும் விதமாக, உலக அஞ்சல் தினம் உருவானதாக கூறப்படுகிறது. இந்த தினத்தை உலகளவில் தபால் வழி தகவல் தொடர்பை கடைப்பிடிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கொண்டாடி மகிழ்கின்றன. இவ்வாறு ஒரு தினத்தைக் கொண்டாடலாம் என அனைத்துலக அஞ்சல் ஒன்றிய மாநாட்டில் 1969ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. அந்த மாநாடு நடைபெற்ற இடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோ என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே எண்ணற்ற மக்கள் தொகை கொண்ட நாடுகளில், இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. எனவே, அதன் தேவை அதிகம் என்பதை உணர்ந்து 1764ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்டது தான், இந்திய தபால் துறை. இதனையடுத்து இந்த துறை பிரிட்டிஷ் அரசின் கீழும், விடுதலைக்குப் பின் தற்போது இந்திய அரசின் கீழும் செயல்பட்டு வருகிறது. இந்திய முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக இதுவரை 23 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் மக்களுக்கான கடிதப் போக்குவரத்துக்கு சேவையாற்றி வருகின்றன. இதில் பெரும்பான்மையானவை கிராமங்களில் தான் செயல்படுகின்றன.
இன்றைய காலத்தில் என்னதான் போனில் வாட்ஸ்அப், இ – மெயில் போன்றவற்றை விரல்நுனியில் தட்டி தகவல்களை பரிமாறினாலும் உணர்வுப்பூர்வமாக உறவுகள் வளர்ந்த கதை, காதல் வளர்ந்த கதை, பலருக்கு அரசுப்பணி கிடைத்த நாள், மணி ஆர்டர் மூலம் பணம் பெற்றநாட்கள் ஆகியப் பல நினைவுகள் நீங்காமல் பசுமை மாறாமல் நமது மனதில் என்றும் நிலைத்திருக்கும். தபாலுடன் நமக்குள் இருக்கும் பந்தத்தை, உலக அஞ்சல் தினமான இன்று நினைத்துப் பார்ப்போம்.