தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மினிலாரியில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 70 இலட்சம் மதிப்பிலான 105 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர்.
சிவகிரி சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு சிலர் கஞ்சா கடத்தி செல்வதாக காவல்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவலர்கள் சோதனைச்சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிரமாகச் சோதனை செய்தனர். அப்போது அழுகிய நிலையில் உருளைக் கிழங்குகள் ஏற்றி வந்த மினி லாரி ஒன்றை நிறுத்தி விசாரித்தனர்.
இதனை ஓசூரில் இருந்து தென்காசிக்குக் கொண்டு செல்வதாக ஓட்டுநர் தெரிவித்தார். இதன் பின், சந்தேகமடைந்த காவலர்கள் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் சோதனை நடத்தினர். இதில், சிறு சிறு கஞ்சா பொட்டலங்கள் இருப்பதைக் கண்டுப்பிடித்தனர்.
இதனை அடுத்து, மினி லாரியில் வந்தவர்களைப் பிடித்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஷியாஸ் என்பதும், புளியங்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்களைக் கைது செய்த காவல்துறை, அவர்களிடமிருந்து 70 இலட்ச ரூபாய் மதிப்புள்ள, 105 கிலோ கஞ்சாவையும், மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிவகிரி காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.