கரூரில் இரண்டு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், மணல் கடத்தல், மணல் குவாரிகளில் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளின் அடிப்படையில் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், கரிகாலன் மற்றும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர் வெங்கடேஷ் உள்ளிட்டோருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும், மணல் குவாரி அதிபர்கள் தொடர்புடைய சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் என 30 -க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். குறிப்பாக, சென்னையில் கனிமவளத்து உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும், அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ. 15 கோடி ரொக்கம் பணம், மேலும், ஒரு கிலோ தங்கம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்தனர். இதனால், மணல் குவாரி அதிபர்கள் ரத்தினம், கரிகாலன், ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேரும் தலைமறைவானார்கள்.
இந்த நிலையில், கரூரில் 2 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம், மல்லம்பாளையம், நன்னியூர் பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை துணை ராணுவப் படை பாதுகாப்புடன் நடத்தி வருகின்றனர்.
ஆறு வாகனங்கள் மற்றும் 1 டெம்போ டிராவவர் வாகனத்தில் வந்த 20 -க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடும் வெயில் சுட்டெரிப்பதால் ஆற்றுப்படுகையில் குடை பிடித்தபடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணல் குவாரி அதிபர்கள், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர் என்றும், இவர்களுக்கு இடையே வரவு – செலவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையொட்டி, இந்த சோதனை மீண்டும் ஒரு முறை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்த சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.