நாம் எப்படி உடல் நலத்தைப் பேணி பாதுகாக்கிறோமோ அது போலவே, மன நலத்தினையும் பேணி பாதுகாக்க வேண்டும் என மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
உடல் ஆரோக்கியத்தைப் போன்றே மன நலத்தின் ஆரோக்கியமும் நன்றாக இருக்க வேண்டும். மனரீதியாகச் சோர்வு அடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மனநலம் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் உலக மனநல தினத்தையொட்டி, சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ஆளுநரின் எண்ணித்துணிக, பகுதி 2, மன நல ஆரோக்கிய ஆளுமைகளுடன் கலந்துரையாடல் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, இளம் தலைமுறையினர் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, பேசிய மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை நமக்கு எல்லாம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். மாணவர்களின் படிப்பு மட்டுமே சாராமல், அவர்களது எதிர்கால நலனை கருத்தில் கொண்டே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
மேலும், இன்றைய நாளில் உடல் நலத்தை பேணிப் பாதுகாப்பது போல் மனநலத்தினையும் நாம் பேணி காத்து உரியக் கவனம் செலுத்த வேண்டும் என அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.