ஆத்தூர் அருகே நகைக்கடலில் ஏற்பட்ட தீவிபத்தில், கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர், கெங்கவல்லி பகுதியில் நகை கடை வைத்துள்ளார். நேற்று, வழக்கம் போல் கடைக்கு வந்த ரவிக்குமார், இரவு 9:00 மணியளவில், 5 கிலோ வெள்ளி மற்றும் 10 பவுன் நகையை லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று இரவு கடையிலிருந்து புகை வந்துள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் கெங்கவல்லி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். நகைக்கடை உரிமையாளரை வரவழைத்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஆனால், கடைக்குள் இருந்த டேபிள், சேர், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. லாக்கரில் இருந்த நகை பெட்டி சூடாக இருந்ததால் அவற்றை திறக்கவில்லை. மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.