அரியலூர் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு மணல் குவாரிகளில் பெரும் ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளது என்றும், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது எனப் புகார் எழுந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். சீர்காழி அருகே வடரங்கம், பட்டிய மேடு, பாலுறான் படுகை உள்ளிட்ட 3 இடங்களில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வந்த நிலையில், அந்த மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று காலை முதல் அரியலூர் மாவட்டம் தளவாய் ஊராட்சிக்குட்பட்ட சேந்தமங்கலம் அடுத்துள்ள திருப்பனூர் கிராமத்தை ஒட்டிச் செல்லும் வெள்ளாற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.
5 கார்களில் வந்த 20 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ட்ரோன் கேமரா மூலமாகவும் அளவீட்டுக் கருவிகள் மூலமும் மணல் குவாரியில் ஆய்வு செய்தனர். எந்தெந்த பகுதிகளில் ஆழமாக மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிற ஒரு மீட்டர் ஆழத்தை விட 13 அடி ஆழம், 15 அடி ஆழம் வரை விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, ஆய்வுக்குழுவினருக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படை காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர்.