மைசூர் தசரா மலர் கண்காட்சியில், 6 இலட்சம் பூக்களைக் கொண்டு, சந்திரயான்-3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் மைசூரில், உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, 10 நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 11 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை பல இலட்சம் மக்கள் பார்த்து இரசிப்பார்கள்.
அந்த வகையில், 15-ஆம் தேதி மைசூர் குப்பண்ணா பூங்காவில், தசரா மலர் கண்காட்சி தொடங்கியது. பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு வடிவமைப்புகளில் மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு, 60 ஆயிரத்திற்கும் அதிகமான பூந்தொட்டிகளில் வைத்து வண்ண வண்ண செடிகள் வளர்க்கப்பட்டது. இந்த ஆண்டு பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில், 6 இலட்சம் வெள்ளை மற்றும் சிகப்பு ரோஜா பூக்களைக் கொண்டு, 24 அடி உயரத்திற்கு சந்திரயான்-3 விண்கலம் மற்றும் லேண்டர், ரோவர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
துர்கா தேவி சிலை, விநாயகர் சிலை, இந்தியா வரைபடம், கிரிக்கெட் பேட், ஸ்டம்ப்ஸ், அரசியலமைப்பு சாசன புத்தகம் ஆகியவை வடிவமைக்கப்பட்டு, வண்ண வண்ண மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. காய்கறிகளால் வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சி வடிவமைப்புக்காக 30 தனியார் தொழிற்சாலைகள், 41 தனியார் விடுதிகள், 13 அரசு அலுவலகங்கள், 22 கல்வி மையங்கள், 6 மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேபோல், தசரா பொருட்கண்காட்சி, உணவு திருவிழா, புத்தகத் திருவிழா ஆகியவைத் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தசரா விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கி, நடந்து வருவதால் மைசூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.