சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக பிரம்மஸ்ரீ மகேஷ் மற்றும் மாளிகைப்புறம் மேல் சாந்தியாக பிரம்மஸ்ரீ முரளி நம்பூதிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில், ஐப்பசி மாத பூஜைகளுக்காக, நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி நடை திறந்து தீபம் ஏற்றினார். இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகத்துக்குப் பின்னர் நெய்யபிஷேகத்தை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம், புஷ்பாபிஷேகம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது.
இதனிடையே, ஆண்டுக்கு ஒரு முறை சபரிமலை ஐயப்பன் கோவிலிலும், மாளிகைபுறத்து அம்மன் கோவிலுக்கும் மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி, காலை 7.30 மணிக்கு உஷ பூஜை நிறைவு பெற்றதும், கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதலான ஒரு ஆண்டு காலத்துக்கான புதிய மேல் சாந்தி தேர்வு நடைபெற்றது. இதில், சபரிமலை புதிய மேல்சாந்தியாக பிரம்மஸ்ரீ மகேஷ் தேர்வு செய்யப்பட்டார். மாளிகைப்புறம் மேல் சாந்தியாக பிரம்மஸ்ரீ முரளி நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்.
வரும் 22-ஆம் தேதி வரை ஐப்பசி மாத பூஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் வழக்கமான உஷ பூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜை இவற்றுடன் தினமும் இரவு 7.00 மணிக்கு படி பூஜை நடைபெறும். எல்லா நாட்களிலும் உதயாஸ்தமன பூஜை உண்டு. 22-ஆம் தேதி இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும்.