உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாஷ் கோவிலுக்கு புனித யாத்திரை சென்று திரும்பியபோது, பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாஷ் கோவிலுக்கு, அதே மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர், தெலங்கான மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 6 பேர் புனித யாத்திரை சென்றனர். ஆதி கைலாஷ் கோவிலுக்குச் சென்று தரிசனம் முடித்து விட்டு, மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, பித்தோராகர் மாவட்டம் லகான்பூர் அருகே தார்ச்சுலா-லிபுலேக் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறி காளி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து பித்தோராகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் லோகேஷ்வர் சிங் உத்தரவின் பேரில், காவல்துறையினரும் மற்றும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், இரவு நேர இருள் மற்றும் பாதகமான சூழ்நிலை காரணமாக, உடல்களை மீட்கும் பணியும் தொய்வு ஏற்பட்டது.
இதுகுறித்து பித்தோராகர் மாவட்ட எஸ்.பி. லோகேஷ்வர் சிங் கூறுகையில், “ஆதி கைலாஷ் யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பிய 6 பேர் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் பலியாகி விட்டனர். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.
அதேபோல, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இரங்கல் தெரிவித்திருக்கிறார். புனித யாத்திரை சென்று திரும்பியபோது விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.