நடந்து முடிந்த பாரா ஆசியா விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை பிரிவில் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என்று 3 பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி யார் ?
பிறந்தத்திலிருந்தே 2 கைகள் இல்லாமல் தன்னம்பிக்கையோடுப் போராடி பதக்கங்களை வென்ற இந்த வீராங்கனையை பற்றி பார்ப்போம்.
ஜம்மு , காஷ்மீரின் கிஷ்த்வாரில் உள்ள லோய்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷீத்தல் தேவி. இவர் கைகள் இல்லையே என்று கவலைப்படுவதை விட கால்கள் இருக்கிறதே என்று நினைத்து சந்தோஷப்படுவதுடன் அதை வைத்து சாதிக்கலாம் எனவும் முடிவும் செய்தார். இவரது எண்ணத்திற்கு பெற்றோர்களும்,நண்பர்களும்,கிராம மக்களும் உறுதுணையாக இருந்தனர்.
விளையாட்டுத்தான் தன்னை உயர்த்தும் என்று முடிவெடுத்து கட்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவதேவி ஆலய விளையாட்டு வாரியத்தில் சேர்ந்தார்.
அங்கு தன்னை வில்வித்தை போட்டிக்கு தயார் செய்யும்படி கூறியுள்ளார்,வில்வித்தை என்பது திறமை, துல்லியம், பார்வை, செறிவு மற்றும் நல்ல கட்டுப்பாடு தேவைப்படும் ஒரு விளையாட்டு ஆகவே பயிற்சியாளர்கள் இரு கைகளும் இல்லாத ஒருவருக்கு எப்படி வில்வித்தையில் பயிற்சிதருவது என்பது தெரியாமல் குழம்பிப்போயினர்.
அதற்கு ஷீத்தல் தேவியே சில வெளிநாட்டு ஊனமுற்ற வில்வித்தை வீரர்களின் வீடியோக்களைப் போட்டுக் காண்பித்து தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
இவரது உறுதியைப் பார்த்து பயிற்சியாளர்களும் இறங்கிவந்து பயிற்சி தந்தனர்,ஆரம்பத்தில் இவரால் கால்களால் வில்லை துாக்கவே முடியாமல் இருந்தது, வேறு விளையாட்டில் பயிற்சி எடுத்துக் கொள்கிறாயா எனக்கேட்ட போது இல்லையில்லை வில்வித்தைதான் என் தேர்வு என்று மீண்டும் மீண்டும் பயிற்சி எடுத்து அதில் தேர்வு பெற்றார்.
ஒரு நாளைக்கு ஐம்பது அம்புகளை குறிபார்த்து எய்து பயிற்சி பெற்றாலே வீரர்கள் சோர்வடைந்து விடுவர் ஆனால் தேவியோ முன்னுாறு அம்புகள் எய்துவிட்டும் சோர்வடையாமல் நிலைத்து நின்றார்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, தேவி சோனிபட்டில் நடந்த பாரா ஓபன் நேஷனல்ஸில் வெள்ளி வென்றார் மற்றும் ஓபன் நேஷனல்ஸில் திறமையான வில்வீரர்களுக்கு எதிராகப் போட்டியிடும் போது நான்காவது இடத்தைப் பிடித்தார்.
அதன்பிறகு வெற்றியை நோக்கியே பயணிக்க ஆரம்பித்தவர் இன்று உடல் ஊனமுற்றவர்கள் பெறும் உயர்ந்த விருதான பாரா ஒலிம்பிக் விருதினை பெற்றுள்ளார்.
தனக்கு கை இல்லையென்றாலும் தன்னம்பிக்கையை தன்னுடைய நம்பகமான கையாக கொண்டு விளையாட்டில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் வெற்றிப் பெற்ற வீராங்கனையை வாழ்த்துவோம்.