ஏமன் நாட்டிலிருந்து ஈரானிய ஹௌதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருவதால், இஸ்ரேல் இராணுவம் செங்கடலில் படைகளை குவித்திருக்கிறது.
இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் 7-ம் தேதி அறிவிக்கப்படாத போரை நிகழ்த்தினர். இதையடுத்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. 26-வது நாளாக இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இப்போரால் இஸ்ரேல் நாட்டில் 1,400 பேரும், காஸா நகரில் 8,500 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், இஸ்ரேலில் 3,500 பேரும், காஸா நகரில் 22,000 பேரும் காயமடைந்திருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில், ஏமன் நாட்டில் இருக்கும் ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இத்தாக்குதல் செங்கடல் பகுதியில் நடத்தப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், நேற்று செங்கடல் பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதை இஸ்ரேலின் ஏரோ வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்திருக்கிறது. இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் செங்கடல் பகுதியில் படைகளை பலப்படுத்தி வருகிறது.
இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் கூறுகையில், ஏமனில் இருந்து ஈரானிய ஆதரவு ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியதைத் தொடர்ந்து இன்று செங்கடல் பகுதியில் இஸ்ரேல் தனது கடற்படை இருப்பை பலப்படுத்தி இருக்கிறது. அதன்படி, இஸ்ரேல் கடற்படை மற்றும் வான் பாதுகாப்புப் படைகள், ஏவுகணை அழிப்பான்கள் செங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.
அதேபோல, இன்று அதிகாலையில் இஸ்ரேலின் தெற்கே நகரமான ஈலாட் அருகே மற்றொரு ஏவுகணைத் தாக்குதலையும் இஸ்ரேல் இராணுவம் இடைமறித்து அழித்திருக்கிறது. அதேபோல, அமெரிக்க கடற்படையின் நாசக்காரக் கப்பலான யு.எஸ்.எஸ். கார்னியும், ஏமனில் இருந்து இஸ்ரேலை குறிவைக்கக்கூடிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி வருகிறது என்று பென்டகன் தெரிவித்திருக்கிறது.