புதிய மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கு விசாரணைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராகாத நிலையில், அமலாக்கத்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதனையடுத்து அவர் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அவர் ஆஜராகவில்லை.
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தனக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மன் சட்ட விரோதம் என தெரிவித்துள்ள அவர், அதனை திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே வழக்கில் டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.