சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள இலந்தக்கரையில் ரோமானிய நாணயம், சிந்து சமவெளி நாகரிக கால சட்டை ‘பொத்தானை’ தொல்லியல் ஆர்வலர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
இது தொடர்பாக தொல்லியல் ஆர்வலர் இரமேஷ் கூறியதாவது: இலந்தக்கரை தொல்லியல் மேட்டுப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட மகத பேரரசை சேர்ந்த வெள்ளி முத்திரை நாணயம், ஆயிரத்து 300 ஆண்டுக்கு முற்பட்ட சிரிய நாட்டுத் தங்க நாணயமும் கிடைத்துள்ளன. தற்போது ரோமானிய நாட்டு நாணயம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இப்பகுதி பன்னாட்டு தொழில் வளம் நிறைந்த பகுதியாக இருந்துள்ளது.
இங்கு உற்பத்தி செய்த பொருட்களுக்கான மூலப்பொருட்கள் வட இந்தியாவில் இருந்து வந்திருக்க வேண்டும். அவை கல் பாசிகள், பல்வேறு ஆபரணங்களாகத் தயார் செய்து மேற்கத்திய நாடுகளுக்கு கடல் மூலம் வாணிபம் செய்துள்ளதாக தெரிகிறது.
தற்போது கிடைத்த ரோமானிய நாணயம் 13 மில்லி மீட்டர் அளவில், 1.50 கிராம் எடையுடன், செம்பு உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு புறம் ரோமப்பேரரசின் உருவமும், மறுபுறம் ஆலிவ் இலைகளுக்கு நடுவில் சில எழுத்துக்களும் காணப்படுகிறது.
சிந்து சமவெளி, மொகஞ்சாதாரோ, ஹரப்பா போன்ற இடங்களில் கிடைத்தது போல், சட்டை பொத்தானும் கிடைத்துள்ளது. இங்கு ஏற்கனவே அகழாய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சிவகங்கை மாவட்டத்தின் மற்றொரு ‘கீழடி’ தொல்லியல் தளமாக இலந்தக்கரை காணப்படுகிறது என்றார்.