இந்தியா உலக அரங்கில் நம்பகமான குரலைக் கொண்டிருக்கிறது. வளரும் நாடுகளின் கவலைகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்று இராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியிருக்கிறார்.
டெல்லியில் பாதுகாப்புத்துறை தொடர்பான சாணக்யா கருத்தரங்கம் நடந்தது. இதில், இராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே கலந்துகொண்டார். அப்போது, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய இராணுவ வீரர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கிய இராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, சிறிது நேரம் அவர்களுடன் உரையாடினார்.
அதாவது, சீனாவின் ஹாங்சோ நகரில் சமீபத்தில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2023 நடைபெற்றது. இதில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் 11 பேர் பங்கேற்றனர். இவர்களில் 7 பேர் பதக்கம் வென்றனர். இவ்வாறு பதக்கம் வென்றவர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் துணைப் பணியாளர்களை இராணுவத் தளபதி மனோஜ் பாண்டே பாராட்டினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மனோஜ் பாண்டே, “இந்திய இராணுவத்தின் பயிற்சி, செயல்பாடுகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம். அதேபோல, இறையாண்மைக்கு மரியாதை, சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வு ஆகியவற்றை வலியுறுத்துவதே இந்தியாவின் கண்ணோட்டமாக இருக்கிறது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பம், புவி அரசியலை முன்னெப்போதும் இல்லாத வகையில் மாற்றி இருக்கிறது. ராஜதந்திர போட்டி மட்டுமின்றி, போர்ச்சூழலையும் மாற்றி இருக்கிறது. சர்வதேச விவகாரங்களில் தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று, இந்தியா உலக அரங்கில் நம்பகமான குரலைக் கொண்டிருக்கிறது. வளரும் நாடுகளின் கவலைகளை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது” என்றார்.