பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில், ‘சந்திரயான் – 3’ விண்கலத்தின் மாதிரி வடிவமைப்பை, சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் திறந்து வைத்தார்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ நிலவுக்கு ‘சந்திரயான் – 3’ விண்கலத்தை அனுப்பியது. விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அதில் இருந்து பிரஜ்ஞான் ரோவர் வெளிவந்து, நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொண்டது. இதன் மூலம், உலக அளவில் விண்வெளி துறையில் இந்தியாவின் பெருமை அதிகரித்தது.
இத்தகைய பெருமை மிகுந்த ‘சந்திரயான் – 3’ விண்கலத்தின் மாதிரி வடிவமைப்பை இஸ்ரோ தயாரித்து, பெங்களூரு கஸ்துாரிபா சாலையில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் வைத்துள்ளது. இதை ‘சந்திரயான் – 2’ திட்ட இயக்குனர் வனிதா, ‘ஆதித்யா எல்1’ திட்ட இயக்குனர் நிகார் ஷாஜி ஆகியோர் முன்னிலையில், ‘சந்திரயான் – 3’ திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், பார்வையாளர்களுக்குத் திறந்து வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘சந்திரயான் – 3’ திட்டம் வெற்றி அடைந்த பின், மாணவர்களிடையே அறிவியல் மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளது. அந்த விண்கலம் எப்படி உள்ளது, அதன் செயல்பாடுகள் என்ன என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் மாதிரி வடிவமைப்பு திறக்கப்பட்டுள்ளது.
இதைப் பார்க்கும்போது, மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம், மேலும் தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறினார்.
இதனை அடுத்து, மாணவர்கள், பார்வையாளர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பலரும் ஆர்வத்துடன் ‘சந்திரயான் – 3’ திட்டம் குறித்து கேள்விகள் எழுப்பி விஞ்ஞானிகளிடம் தகவல் பெற்றனர்.