நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கத்தில் பலியோனோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், நேபாள நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்ததாக கூறியுள்ளார். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேபாள மக்களுடன் இந்தியா என்றும் துணை நிற்கும் என்றும், அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.