சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா, மாநிலங்களவைத் தலைவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா. இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, டெல்லி அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டம் (திருத்தம்) 2023-ஐ பரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவில் 5 மாநிலங்களவை எம்.பி.க்களின் பெயர்களை அவர்களைக் கேட்காமல் சேர்த்ததாக குற்றம்சாட்டினார்.
மேலும், சிறப்பு உரிமைகள் மீறப்பட்டதாக 5 எம்.பி.க்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த விவகாரம் நாடாளுமன்ற உரிமை மீறல் குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை ராகவ் சதா அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனவே, தனது சஸ்பெண்ட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நடந்து வந்தது. இந்த நிலையில், இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதன் பராசத், “ராகவ் சத்தாவுக்கு அவையின் கண்ணியத்தை பாதிக்கும் நோக்கம் எதுவும் கிடையாது. இதற்காக அவைத் தலைவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறார்” என்றார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி சந்திரசூட், “மாநிலங்களவைத் தலைவர் (ஜக்தீப் தன்கர்) ஆம் ஆத்மி எம்.பி.யின் மன்னிப்பை அனுதாபத்துடன் பரிசீலனை செய்து, இந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு வழியைக் காண வேண்டும். மிகவும் இளையவரான ராகவ் சத்தா முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகி இருக்கிறார்” என்று சுட்டிக்காட்டினார்.
இதைத் தொடர்ந்து, அட்டார்னி ஜெனரல் கூறுகையில், “நெறிமுறைக் குழு இன்று கூடுகிறது. சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார். இதன் பிறகு, இவ்வழக்கு நிலவரம் குறித்து தெரிவிக்கும்படி அட்டர்னி ஜெனரலிடம் கூறிய உச்ச நீதிமன்றம், வழக்கை தீபாவளிக்கு பிறகு ஒத்திவைத்தது.