திருச்சி அருகே கொள்ளிடம் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் திடீர் ஆய்வு செய்தனர்.
திருச்சி மாவட்டம் தாளக்குடி, நொச்சியாம் மாதவப் பெருமாள் கோவில், கொண்டையம்பேட்டை, கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான மணல் குவாரி அரசின் அனுமதியோடு செயல்பட்டு வருகிறது.
இந்த குவாரியில் கடந்த செப்டம்பர் 12-ம் மற்றும் 17 ஆம் தேதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில், ஐ.ஐ.டி மாணவர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 -க்கும் மேற்பட்டோர் கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு செய்தனர்.
எவ்வளவு ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டது என ரிவர் சர்வேயர் மற்றும் ஹைட்ரோ சர்வேயர் எனப்படும் கருவியைக் கொண்டு அளவீடு செய்தனர்.
மேலும், ஒரு நாளைக்கு எத்தனை லாரிகளில் மணல் கொண்டு செல்லப்பட்டது?, அனுமதியின்றி எத்தனை லாரிகள் செல்கிறது? இதற்குப் பணம் எவ்வளவு வசூல் செய்யப்படுகிறது ? மணல் குவாரியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சோதனை செய்தனர்.
பல மணி நேர சோதனைக்குப் பின்பு இது தொடர்பாக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் உதவியாளர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த மாதம் மூடிய குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.