நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு இந்தியா சார்பில் 10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 3-ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால், 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 250-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.
இதனிடையே, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
இதை அடுத்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு, இந்தியாவின் சார்பில் 10 கோடி மதிப்பிலான 11 டன் நிவாரணப் பொருட்களை, இந்திய விமானப் படையின் இராணுவ விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கா் தனது எக்ஸ் பதிவில்,‘‘பாரத பிரதமரின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கையின் கீழ், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை முதல் நாடாக இந்தியா அனுப்பியது’ என்று தெரிவித்தார்.
நிவாரணப் பொருள்களை நேபாள அதிகாரிகளிடம் நேபாளத்துக்கான இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா வழங்கினார்.