ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் ரஹ்மானை கண்டுகொள்ளாத வங்கதேசம் மேத்யூஸை மட்டும் டைம் அவுட் செய்தது ஏன்?
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்து போனார். இது சமூகவலைத்தளத்தில் பேசும் பொருளாக மாறியது.
இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸை டைம் அவுட் முறையில் அவுட் செய்த வங்கதேச வீரர்களின் செயல்பாடுகள் சரியா, தவறா என்பது குறித்து இரசிகர்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.
ஏஞ்சலோ மேத்யூஸ்ஸை இப்படி அவுட் செய்தது ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட்டுக்கு எதிராக இருப்பதாக இரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். என்ன தான் விதிகளின் படி அவுட் என்றாலும், சமரவிக்ரமா ஆட்டமிழந்து வெளியேறிய 10வது வினாடியிலேயே ஏஞ்சலோ மேத்யூஸ் மைதானத்திற்குள் வந்துவிட்டார்.
இதன்பின் உயிர் காக்கும் ஹெல்மட் சேதமாக இருப்பதை அறிந்து அதனை மாற்ற நேரம் எடுத்து கொண்டுள்ளார்.இதே வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடும் போது, பேட்டிங் செய்வதற்காக வேகமாக களமிறங்கிய முஜீப் உர் ரஹ்மான் அப்டமன் கார்டை மறந்து களம் புகுந்தார்.
இதன்பின் நினைவு வந்து, வீரர்களை கொண்டு வர சொல்லி மைதானத்திலேயே கார்டை மாற்றி கொண்டார். அப்போது வங்கதேச வீரர்கள் முஜீப் உர் ரஹ்மானுக்கு எதிராக நடுவர்களிடம் எந்த அப்பீலும் கோரவில்லை.
ஆனால் மேத்யூஸ்-க்கு மட்டும் வங்கதேசம் அப்பீல் செய்து டைம் அவுட் செய்துள்ளது. மேத்யூஸ் வேண்டுமென்றே ஹெல்மட்டை காரணமாக வைத்து நேரத்தை தாமதம் செய்திருந்தால் கூட வங்கதேசம் அப்பீல் செய்ததில் தவறில்லை என்று கூறலாம்.
ஆனால் ஹெல்மட் பட்டை அறுபட்டிருந்ததை நேரடியாக ஷகிப் அல் ஹசனிடம் காண்பித்தும் அவர்கள் அப்பீலில் இருந்து பின் வாங்கவில்லை.
இதற்கு 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதிபெற வேண்டும் என்பதற்காகவே வங்கதேச அணி மோசமான வகையில் வெற்றி பெற முயற்சித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.