தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரயிலில் பட்டாசுகள் கொண்டு சென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என இரயில்வே காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைவருகிற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.
மேலும் அவர்கள் பணியாற்றி வரும் ஊர்களில் இருந்து பட்டாசுகளை வாங்கி சொந்த ஊருக்கு எடுத்து செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இரயிலில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விதிகளை மீறி ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் இரயில் நிலையங்களில் 1,300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி பட்டாசுகளை எடுத்துச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள இரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரயில் நிலையங்களில் கூடுதல் இரயில்வே காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.