நேபாளத்தில் சமூக நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்து சீனாவின் டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், ‘பைட் டான்ஸ்’ என்ற நிறுவனம், டிக்டாக் என்ற சமூக வலைத்தள செயலியை உருவாக்கியது. இந்த செயலி உலகம் முழுவதும் செயல்பட்டு வந்தது.
இந்த செயலி நாட்டின் பாதுகாப்புக்கும், தனிப்பட்ட நபர்களின் தரவுகளுக்கும் உரிய பாதுகாப்பின்மை இருப்பதாகக் கூறி இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.
இந்த நிலையில் நம் அண்டை நாடான நேபாளத்திலும், டிக்டாக் செயலிக்குத் தடை விதித்துள்ளது. சமீபகாலமாக இந்தச் செயலியின் மூலமாக பல்வேறு மதத்தினர் இடையே வெறுப்புணர்வு தூண்டும் வகையில் காணொலிகள் பதிவிட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சமூக நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் செயல்கள் அதிகரித்துள்ளதாக, நேபாள அரசு கண்டறிந்துள்ளது.
இதை அடுத்து, பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரேகா சர்மா கூறுகையில், ”டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்க அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனினும், அதற்கான காலக்கெடு எதுவும் வரையறுக்கப்படவில்லை,” என்று கூறினார்.